லாகூர்: எதிர்வரும் உலகக் கோப்பை தொடரில் பரிச்சயம் இல்லா இந்திய ஆடுகளச் சூழலில் விளையாடுவது குறித்து தங்களுக்கு கவலை இல்லை என பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டன் பாபர் அஸம் தெரிவித்துள்ளார்.
கடந்த 2016 டி20 உலகக் கோப்பை தொடரில் கடைசியாக பாகிஸ்தான் கிரிக்கெட் அணி, இந்தியாவில் விளையாடி இருந்தது. இரு நாடுகளுக்கு இடையிலான உறவு மற்றும் அரசியல் நிலைபாடு காரணமாக பாகிஸ்தான் மற்றும் இந்திய அணிகள் நேரடி கிரிக்கெட் தொடர்களில் விளையாடுவது இல்லை. ஐசிசி நடத்தும் தொடர்களில் மட்டுமே விளையாடி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. பாகிஸ்தான் அணி வீரர்கள் ஐபிஎல் தொடரிலும் விளையாடுவது இல்லை.
இந்நிலையில், உலகக் கோப்பை தொடரில் பங்கேற்க இந்தியா புறப்படுவதற்கு முன்னதாக நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் பாபர் அஸம் பங்கேற்றார். அப்போது அவர் “ஒவ்வொரு வீரரும் அனைத்து விதமான சூழல் மற்றும் நாடுகளில் விளையாட தயாராக இருக்க வேண்டும். எங்களில் பலர் இந்தியாவில் விளையாடியது இல்லை. ஆனால், அங்கு இருக்கும் களச் சூழல் சார்ந்த தகவல்களை திரட்டி உள்ளோம். அதில் இங்கு உள்ளது போலவே ஆடுகளம் இருக்கும் எனத் தெரிகிறது. அதனால் பரிச்சயம் இல்லா இந்திய களச் சூழல் குறித்த கவலை எதுவும் எங்களுக்கு இல்லை. சென்னையில் மட்டும் ஆடுகளம் சுழற்பந்து வீச்சுக்கு கைகொடுக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2019-ல் நான் ஒரு வீரராக விளையாடி இருந்தேன். இந்த முறை அணியை வழிநடத்துகிறேன். அதை எண்ணி நான் பெருமை கொள்கிறேன். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி உலகக் கோப்பையுடன் நாடு திரும்புவதற்கான முயற்சிகளை முன்னெடுப்போம். நாங்கள் பாகிஸ்தான் ரசிகர்களை மிஸ் செய்வோம். இருந்தாலும் அவர்கள் எழுப்பும் அந்த ஒலியை சமூக வலைதளங்களில் நாங்கள் பார்ப்போம்.
» வாரிசு சான்றிதழ் தொடர்பான அரசாணையை எதிர்த்த வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு
ஓர் அணியாக இணைந்து வெற்றி ஆனாலும், தோல்வி ஆனாலும் சந்திப்போம். நாங்கள் ஒரு குடும்பம் போல இயங்கி வருகிறோம்” என அவர் தெரிவித்துள்ளார். இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் அக்டோபர் 14-ம் தேதி அகமதாபாத் நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் உலகக் கோப்பை லீக் தொடரில் விளையாடுகின்றன.