ரியோ டி ஜெனிரோ: உலகக்கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்திய வீராங்கனை இளவேனில் வாலறிவன் தங்கம் வென்றார்.
உலகக்கோப்பை துப்பாக்கிச்சுடுதல் போட்டிகள் பிரேசிலின் ரியோ டி ஜெனிரோ நகரில் நடைபெற்று வருகின்றன. இதில் நேற்று நடைபெற்ற மகளிர் 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் இந்திய அணி சார்பில் இளவேனில் வாலறிவன் பங்கேற்றார். இவர் தமிழகத்தைச் சேர்ந்தவர். இறுதிப்போட்டியில் அவர் 252.2 புள்ளிகள் பெற்று முதலிடம் பிடித்தார். இதையடுத்து இந்தப் பிரிவில் அவர் தங்கப் பதக்கத்தைத் தட்டிச் சென்றார்.
பிரான்ஸ் வீராங்கனை ஓஷேன் முல்லி 251.9 புள்ளிகளுடன் 2-வது இடத்தைப் பிடித்து வெள்ளியைக் கைப்பற்றினார். சீன வீராங்கனை ஜாங் ஜியால் 3-வது இடம் பிடித்து வெண்கலப் பதக்கத்தை தனதாக்கிக் கொண்டார். பிரேசிலில் நடைபெறும் உலகக் கோப்பைபோட்டியில் இந்திய அணி பெறும் முதல் பதக்கம் இது என்பது குறிப்பிடத்தக்கது.