ஆசிய கோப்பை கிரிக்கெட் | இந்திய அணியில் வாஷிங்டன் சுந்தர் சேர்க்கப்பட்ட காரணம் இதுதான்?

By செய்திப்பிரிவு

மும்பை: ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதி ஆட்டத்துக்கான இந்திய அணியில் வாஷிங்டன் சுந்தர் சேர்க்கப்பட்டுள்ளார்.

நடப்பு ஆசிய கோப்பை தொடரின் சூப்பர்-4 சுற்று போட்டிகள் கொழும்பில் உள்ள ஆர்.பிரேமதாசா சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. நேற்றுமுன்தினம் நடந்த ஆட்டத்தில் வங்கதேச அணியிடம் இந்திய அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

இந்த போட்டியின்போது அக்சர் படேலுக்கு காயம் ஏற்பட்டது. அவரது காயத்தின் தன்மை குறித்து சரியான தகவல் வெளியாகாத நிலையில், வாஷிங்டன் சுந்தர் இறுதிப்போட்டிக்கான அணிக்கு அழைக்கப்பட்டுள்ளார். ஆஃப் ஸ்பின்னர் ஆல் ரவுண்டரான வாஷிங்டன் சுந்தர், கடைசியாக ஜனவரி மாதம் நியூசிலாந்துக்கு எதிராக விளையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே, அக்சர் படேலுக்கு இரண்டிற்கும் மேற்பட்ட காயங்கள் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அவருக்கு தொடைப்பகுதியில் ஏற்படும் ஹாம்ஸ்டிரிங் காயம் (hamstring) ஏற்பட்டுள்ளதாகவும், ஹாம்ஸ்டிரிங் காயம் ஏற்பட்டால் சுமார் இரண்டு மாதங்களுக்கு மேல் ஓய்வு தேவைப்படும் என்பதால் உலகக்கோப்பை தொடரில் அவரின் பங்கேற்பு கேள்விக்குறியாகியுள்ளதால் பிசிசிஐ கவலை அடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. உலகக்கோப்பை தொடருக்கு இன்னும் மூன்று வாரங்களே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE