லெபனானிடம் வீழ்ந்தது இந்திய கால்பந்து அணி

By செய்திப்பிரிவு

சியங் மாய்: தாய்லாந்தின் சியங் மாய் நகரில் கிங்ஸ் கோப்பைக்கான கால்பந்து தொடர் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று 3-வது இடத்துக்கான ஆட்டத்தில் இந்தியா - லெபனான் அணிகள் மோதின.

முதல் பாதி ஆட்டத்தில் இரு அணிகள் தரப்பில் கோல் ஏதும் அடிக்கப்படவில்லை. 77-வது நிமிடத்தில் லெபனான் அணி வீரர் அல் ஹஜ் கார்னரில் இருந்து பாக்ஸ் பகுதிக்குள் உதைத்த பந்தை, இந்திய வீரர்களால் மார்க் செய்யப்படாமல் இருந்த சப்ரா தலையால் முட்டி கோலாக மாற்ற முயன்றார். ஆனால் அதை இந்திய அணியின் கோல்கீப்பர் குர்பிரீத் சிங் சாந்து அற்புதமாக தட்டிவிட்டார்.

ஆனால், அவர் விலக்கி விட்ட பந்தை லெபனான் அணியின் சென்டர்-பேக் வீரரான அல் ஜெனின் ’பைசைக்கிள் கிக்’ முறையில் கோல் அடித்து அனைவரையும் வியக்க வைத்தார். இதனால் லெபனான் 1-0 என முன்னிலை வகித்தது. கடைசி வரை போராடியும் இந்திய அணியால் பதில் கோல் அடிக்க முடியவில்லை. முடிவில் லெபனான் அணி 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று வெண்கலப் பதக்கம் வென்றது. இந்திய அணி கடைசி இடத்துடன் தொடரை நிறைவு செய்தது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE