சென்னை: ஃபிடே வெளியிட்டுள்ள செஸ் தரவரிசை பட்டியலில் 37 வருடங்களாக இந்தியாவின் நம்பர் 1 செஸ் வீரராக இருந்த விஸ்வநாதன் ஆனந்தை பின்னுக்குதள்ளி முதலிடத்தை பிடித்துள்ளார் இளம் இந்திய கிராண்ட் மாஸ்டர் குகேஷ்.
உலக கோப்பை செஸ் தொடர் முடிவடைந்த நிலையில் ஃபிடே செஸ் தரவரிசைபட்டியலை வெளியிட்டுள்ளது. இதில்சென்னையை சேர்ந்த டி.குகேஷ் 2,758 ரேட்டிங் புள்ளிகளுடன் 8-வது இடத்தை பிடித்துள்ளார். இதன் மூலம் அவர், இந்தியாவின் நம்பர் 1 செஸ் வீரராக மாறி உள்ளார். இதன் மூலம் இந்தஇடத்தில் 1986-ம் ஆண்டு முதல் 37 ஆண்டுகள் ஆதிக்கம் செலுத்தி வந்த 5 முறை உலகசாம்பியனான இந்திய ஜாம்பவான் விஸ்வநாதன் ஆனந்தை பின்னுக்குத் தள்ளி உள்ளார் குகேஷ்.
ஃபிடே தரவரிசை பட்டியலில் விஸ்வநாதன் ஆனந்த் 2,754 ரேட்டிங் புள்ளிகளுடன் 9-வது இடத்தில் உள்ளார். ஃபிடே ‘லைவ் ரேட்டிங்கில்‘ கடந்த சில வாரங்களுக்கு முன்னர் குகேஷ் 8-வது இடத்துக்கு முன்னேறி இந்தியாவின் நம்பர் 1 செஸ் வீரர் என்ற அந்தஸ்தை பெறுவதை உறுதிப்படுத்தி இருந்தார். தற்போது செப்டம்பர் 1ம் தேதி நிலவரப்படி அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்ட தரவரிசையில் முதலிடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளார்.
உலகக் கோப்பை செஸ் தொடரில் வெள்ளிப் பதக்கம் வென்ற இந்தியாவின் பிரக்ஞானந்தா 2727 ரேட்டிங் புள்ளிகளுடன் ஃபிடே தரவரிசையில் 19-வது இடத்தை பிடித்துள்ளார். இந்திய அளவில் பிரக்ஞானந்தா 3-வது இடத்தில் உள்ளார்.
» ஆசியக் கோப்பை | பாகிஸ்தானின் 'அட்டாக் பவுலிங்' குறித்த கேள்வி - ரோகித் சர்மா கொடுத்த 'நச்' பதில்
» IND vs PAK | “விராட் கோலி உலகத்தரம் வாய்ந்த வீரர்” - பாக். வீரர் ஷதாப் கான் புகழ்ச்சி