“பிரதமரை சந்தித்தது பெருமை” - பிரக்ஞானந்தா நெகிழ்ச்சி

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: பிரதமர் மோடியை சந்தித்தது பெருமை என இந்திய கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தா தனது எக்ஸ் பக்கத்தில் ட்வீட் செய்துள்ளார். இந்த சந்திப்பின்போது அவரது பெற்றோரும் உடன் இருந்தனர்.

அண்மையில் உலகக் கோப்பை செஸ் தொடர் அஜர்பைஜானில் உள்ள பாகு நகரில் நடைபெற்றது. இதில் ஓபன் பிரிவில் கார்ல்சனுடன் இறுதிப் போட்டியில் விளையாடி இருந்தார் சென்னையை சேர்ந்த இந்திய கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தா. வெள்ளிப் பதக்கம் வென்ற இளம் வயது வீரரான அவரது ஆட்டத்திறன் உலகளவில் கவனம் பெற்றது. அதனால் அவருக்கு பாராட்டுகள் அதிகம் குவிந்தன. தொடர்ந்து உலக ரேபிட் டீம் சாம்பியன்ஷிப்பில் பிரக்ஞானந்தா விளையாடிய WR அணி சாம்பியன் பட்டம் வென்றது.

இந்நிலையில், அவர் இந்தியா திரும்பினார். அவருக்கு சென்னை விமான நிலையத்தில் அமோக வரவேற்பு அளிக்கப்பட்டது. முதல்வர் ஸ்டாலின் ரூ.30 லட்சத்துக்கான ஊக்கத் தொகையை அவருக்கு வழிநார். இந்நிலையில், பிரதமர் மோடியை தனது பெற்றோருடன் சந்தித்துள்ளார் பிரக்ஞானந்தா.

“மரியாதைக்குரிய பிரதமரை அவரது இல்லத்தில் சந்தித்தது பெருமையாக இருந்தது. என்னையும், என் பெற்றோரையும் ஊக்கப்படுத்தும் விதமாக பேசிய உங்களுக்கு எனது நன்றி” என பிரக்ஞானந்தா தெரிவித்துள்ளார்.

“உங்கள் குடும்பத்துடன் உங்களை சந்தித்ததில் மகிழ்ச்சி பிரக்ஞானந்தா. நீங்கள் ஆர்வத்தையும், விடாமுயற்சியையும் வெளிப்படுத்துகிறீர்கள். இந்திய இளைஞர்கள் எந்த களத்தையும் கைப்பற்ற முடியும் என்பதற்கு எடுத்துக்காட்டு நீங்கள். உங்கள் எண்ணிப் பெருமை கொள்கிறேன்” என பிரதமர் மோடியும் ட்வீட் செய்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE