சலாலா: சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பு சார்பில் ஹாக்கி 5 உலகக் கோப்பை தொடர் 2024ம் ஆண்டு ஜனவரில் ஓமனில் நடைபெறுகிறது. இந்த தொடருக்கான ஆசிய அளவிலான தகுதி சுற்று ஆட்டங்கள் தற்போது ஓமனில் உள்ள சலாலாவில் நடைபெற்று வருகின்றன.
இதில் ஆடவர் பிரிவில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் இந்தியா, வங்கதேசத்தை எதிர்த்து விளையாடியது. தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய இந்திய அணி 15-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. மனீந்தர் சிங் 4 கோல்களும், முகமது ரஹீல் 3 கோல்களும் அடித்தனர். சுக்வீந்தர் சிங், குர்ஜோத் சிங், பவன் ராஜ்பர் ஆகியோர் தலா 2 கோல்களும் மன்தீப் மோர், திப்சன் திர்கே ஆகியோர் தலா ஒரு கோலும் அடித்து அணிக்கு வலுசேர்த்தனர்.