புதுடெல்லி: உலக தடகள சாம்பியன்ஷிப்பில் தங்கம் வென்ற நீரஜ் சோப்ராவுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது. களத்தில் கலக்கியதற்காக மட்டும் அவர் பாராட்டு மழையில் நனைந்து விடவில்லை. மாறாக, இந்திய தேசியக் கொடியில் ஆட்டோகிராஃப் இட மறுத்த தனது செயலுக்காவும் அனைவரின் இதயத்தையும் அவர் வென்று வருகிறார்.
ஹங்கேரி தலைநகர் புடாபெஸ்ட்டில் நடந்த உலக தடகள சாம்பியன்ஷிப்பில் ஈட்டி எறிதல் இறுதிப் போட்டியில் 88.17 மீட்டர் தூரத்துக்கு ஈட்டியை எறிந்து தங்கம் வென்றார் நீரஜ் சோப்ரா. இதன்மூலம் உலக தடகள சாம்பியன்ஷ்ப்பில் தங்கம் வென்ற முதல் இந்தியர் என்ற வரலாற்றுச் சிறப்பு மிக்க சாதனையை படைத்துள்ளார். இதனைத் தொடர்ந்து ஹங்கேரிய ரசிகை ஒருவர் நீர்ஜ் சோப்ராவிடம் வந்து இந்திய தேசியக் கொடியில் அவரது ஆட்டோகிராஃப் வேண்டும் என்று கேட்டுள்ளார். தேசியக் கொடியில் கையெழுத்திட மறுத்த சோப்ரா, அந்த ரசிகையை ஏமாற்ற மனமில்லாமல் அவரது டிஷர்ட்டின் வலது கையில் கையெழுத்திட்டுள்ளார்.
இதனை ஜோனாதன் செல்வராஜ் என்பவர் தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் பகிர்ந்து, ஹங்கேரிய ரசிகையின் கையில் நீரஜ் சோப்ரா கையெழுத்திடும் புகைப்படத்தையும் சேர்த்து பதிவிட்டுள்ளார். தனது செயல்களின் மூலம் களத்தின் உள்ளேயும் வெளியேயும் அனைவரின் இதயங்களையும் வென்று வரும் நீரஜ் சோப்ராவை எக்ஸ் பயன்பாட்டாளர்கள் பலரும் பாராட்டி வருகின்றனர்.
"என்னவொரு அற்புதமான செயல். உண்மையிலேயே நம் அனைவருக்கும் அவர் உத்வேகமளிப்பவர். தேசியக் கொடி மீதான அவரின் மதிப்பும் மரியாதையும் போற்றுதலுக்குரியது" என்று அனில் டன்வர் என்பவர் கருத்து தெரிவித்துள்ளார்.
» பெரிய போட்டிகளிலும் ஐசிசி தொடர்களிலும் சொதப்புவது இந்திய டாப்-ஆர்டர் வீரர்களே!- சாபா கரீம்
மனிஷ் மான்கே என்பவர், "டோக்கியோ ஒலிம்பிக் போட்டியின்போது கூட தேசியக் கொடியை எப்படி முறையாக மடிக்க வேண்டும் எனக் கூறியிருந்தார்" என்று தெரிவித்துள்ளார். "ராணுவ வீரர், ஒரு போதும் தவறான முன்மாதிரியாக இருக்கமாட்டார்" என்று அமோக் சாப்கால்கர் என்பர் தெரிவித்துள்ளார்.
இந்த வெற்றியின் மூலம் ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம், டைமண்ட் லீகில் சாம்பியன் பட்டம், உலக தடகள சாம்பியன்ஷிப்பில் தங்கம் என அனைத்து தங்கப் பதக்கங்களையும் பெற்ற் வீரராக திகழ்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. | வாசிக்க > உலக தடகள சாம்பியன்ஷிப் | ஈட்டி எறிதலில் தங்கம் வென்றார் நீரஜ் சோப்ரா!