உலக தடகள சாம்பியன்ஷிப்பில் தங்கம் வென்ற முதல் இந்தியர்: நீரஜ் சோப்ரா கிராமத்தில் கொண்டாட்டம்!

By செய்திப்பிரிவு

பானிபட்: உலக தடகள சாம்பியன்ஷிப்பில் தங்கம் வென்ற முதல் இந்தியர் என்ற வரலாற்று சிறப்பு மிக்க சாதனையை படைத்துள்ளார் தடகள வீரர் நீரஜ் சோப்ரா. இந்த சாதனையை இந்தியா மற்றும் அவரது சொந்த கிராமத்தின் மக்கள் கொண்டாடி வருகின்றனர்.

ஹங்கேரி தலைநகர் புடாபெஸ்ட்டில் உலக தடகள சாம்பியன்ஷிப்பில் ஈட்டி எறிதல் இறுதிப் போட்டியில் 88.17 மீட்டர் தூரத்துக்கு ஈட்டியை எறிந்து தங்கம் வென்றுள்ளார் நீரஜ் சோப்ரா. இறுதிப் போட்டியில் இரண்டாவது முயற்சி முதல் கடைசி முயற்சி வரையில் அவர் தான் பட்டியலில் முதலிடத்தில் நீடித்தார். அதன் மூலம் தங்கம் வென்றார்.

25 வயதான அவர், ஹரியாணாவின் பானிபட்டில் ஏழை விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர். தனது விளையாட்டு திறனால் முன்னேற்றம் கண்டார். அந்த மாநிலத்தில் உள்ள கந்த்ரா தான் அவரது சொந்த கிராமம். ஒலிம்பிக், உலக தடகள சாம்பியன்ஷிப் என தங்கம் வென்ற அவரது சாதனையை சொந்த கிராம மக்களும், உறவினர்களும் கொண்டாடி வருகின்றனர்.

“நீரஜ், உலக தடகள சாம்பியன்ஷிப்பிலும் தங்கப் பதக்கம் வென்றுள்ளது நம் நாட்டுக்கு மிகவும் பெருமையான தருணம். அவர் இந்தியா திரும்பியதும் இதனை விமரிசையாக கொண்டாடுவோம்” என அவரது தந்தை சதீஷ் குமார் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE