காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியின் முதல் நாளில் இந்திய அணி 2 தங்கப் பதக்கம், 3 வெள்ளிப் பதக்கம், 2 வெண்கலப் பதக்கம் என மொத்தம் 7 பதக்கங்களை வென்றது. ஆடவர் 56 கிலோ எடைப் பிரிவு பளுதூக்குதலில் இந்தியாவின் சுகன் தேய் சிங் 248 கிலோ (109+139) எடையைத் தூக்கி தங்கப் பதக்கம் வென்றார்.
இவர் ஸ்னாட்ச் பிரிவில் பின்னடைவை சந்தித்தாலும், கிளீன் அன்ட் ஜெர்க் பிரிவில் அபாரமாக செயல்பட்டு தங்கத்தை தட்டிச் சென்றார். இதேபிரிவில் மலேசியாவின் ஜுல்கெல்மி பிசோல் வெள்ளிப் பதக்கத்தையும், இந்தியாவின் கணேஷ் மாலி வெண்கலப் பதக்கத்தையும் வென்றனர்.
மகளிர் 48 கிலோ எடைப் பிரிவு பளுதூக்குதலில் இந்தியாவின் சஞ்ஜிதா தங்கப் பதக்கமும், மீராபாய் சானு வெள்ளிப் பதக்கமும் வென்றனர். இந்தப் பிரிவில் வலுவான போட்டியாளர்கள் இல்லாத நிலையில் சஞ்ஜிதா 173 கிலோ (77+96) எடையையும், மீராபாய் 170 கிலோ (75+95) எடையையும் தூக்கினர்.
ஜூடோவில் ஆடவர் 60 கிலோ எடைப் பிரிவில் இந்தியாவின் நவ்ஜோத் சானாவும், மகளிர் 48 கிலோ எடைப் பிரிவில் இந்தியாவின் சுஷீலா லிக்மபாமும் வெள்ளிப் பதக்கம் வென்றனர். மகளிர் 52 கிலோ எடைப் பிரிவு ஜூடோ போட்டியில் இந்தியாவின் கல்பனா தௌடம் வெண்கலப் பதக்கம் வென்றார்.
தங்கம் வென்றது குறித்து மகிழ்ச்சி தெரிவித்த சுகன் தேய், “முதலில் ஜூனியர் உலக சாம்பியன்ஷிப் போட்டியில் வெண்கலம் வென்றேன். அதன்பிறகு கடந்த காமன்வெல்த் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றேன். அதன் தொடர்ச்சியாக இப்போது தங்கப் பதக்கத்தை வென்றிருக்கிறேன்.
கடந்த காமன்வெல்த் போட்டியிலேயே நான் தங்கம் வென்றிருக்க வேண்டும். ஆனால் தொழில்நுட்ப கோளாறால் தங்கப் பதக்கத்தை இழந்தேன். இப்போது நான் வென்றிருக்கும் தங்கப் பதக்கம் எனது வாழ்க்கையின் தலைசிறந்த பதக்கம். இதேபோன்று ஆசிய விளையாட்டுப் போட்டியிலும் சிறப்பாக செயல்பட்டு பதக்கம் வெல்ல வேண்டும் என்பதே எனது அடுத்த இலக்கு” என்றார்.