IRE vs IND 2-வது டி20 | 33 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி; அச்சுறுத்திய பால்பிர்னி

By செய்திப்பிரிவு

டப்ளின்: அயர்லாந்து அணிக்கு எதிராக ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற 2-வது டி20 போட்டியில் 33 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது. இதன் மூலம் தொடரை 2-0 என்ற கணக்கில் இந்தியா வென்றுள்ளது.

பும்ரா தலைமையிலான இந்திய அணி அயர்லாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20 கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரின் 2-வது போட்டி டப்ளினில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற அயர்லாந்து அணி பவுலிங் தேர்வு செய்தது. முதலில் பேட் செய்த இந்திய அணி, 20 ஓவர்களில் 5 விக்கெட்கள் இழப்புக்கு 185 ரன்களை எடுத்தது. ஜெய்ஸ்வால் மற்றும் ருதுராஜ் கெய்க்வாட் தொடக்க வீரர்களாக விளையாடினர். ஜெய்ஸ்வால், 18 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த திலக் வர்மா, 1 ரன்னில் வெளியேறினார்.

பின்னர் சஞ்சு சாம்சனும், ருதுராஜ் கெய்க்வாடும் இணைந்து 71 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்தனர். சஞ்சு சாம்சன், 26 பந்துகளில் 40 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். கெய்க்வாட், 43 பந்துகளில் 58 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

தொடர்ந்து ரிங்கு சிங் மற்றும் ஷிவம் துபே இணைந்து 5-வது விக்கெட்டுக்கு 55 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். ரிங்கு சிங், 21 பந்துகளில் 38 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். துபே, 16 பந்துகளில் 22 ரன்கள் எடுத்தார். இந்திய அணி 185 ரன்கள் எடுத்து 20 ஓவர்களை நிறைவு செய்தது.

அச்சுறுத்திய பால்பிர்னி: 186 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை அயர்லாந்து அணி விரட்டியது. இருந்தும் 28 ரன்களுக்கு 3 விக்கெட்களை இழந்து அந்த அணி தடுமாறியது. இருந்தும் தொடக்க ஆட்டக்காரர் ஆண்ட்ரூ பால்பிர்னி நிலையாக ஆடினார்.

கேம்பர் மற்றும் டோக்ரெல் உடன் 35 ரன்கள் மற்றும் 52 ரன்கள் என பார்ட்னர்ஷிப் அமைத்தார் ஆண்ட்ரூ பால்பிர்னி. தனது அதிரடி பேட்டிங் பாணியால் இந்திய அணியின் பந்து வீச்சாளர்களை அச்சுறுத்தினார். 51 பந்துகளில் 72 ரன்களை எடுத்த அவர், அர்ஷ்தீப் வேகத்தில் ஆட்டமிழந்தார். 5 பவுண்டரி மற்றும் 4 சிக்ஸர்கள் அவரது இன்னிங்க்ஸில் அடங்கும். அவர் ஆட்டமிழந்த போது அந்த அணி 6 விக்கெட்கள் இழப்புக்கு 123 ரன்கள் எடுத்திருந்தது.

20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்கள் இழப்புக்கு 152 ரன்கள் எடுத்தது அயர்லாந்து. அதன் மூலம் 33 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது இந்தியா. கேப்டன் பும்ரா, பிரசித் கிருஷ்ணா, ரவி பிஷ்னோய் ஆகியோர் தலா 2 விக்கெட்களை கைப்பற்றி இருந்தனர். அர்ஷ்தீப் 1 விக்கெட் வீழ்த்தினார். அயர்லாந்து வீரர் ஜார்ஜ் டோக்ரெல் ரன் அவுட் ஆனார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE