மும்பை: உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவர் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டன் பாபர் அஸம் என இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி புகழ்ந்துள்ளார்.
வரும் செப்டம்பர் 2-ம் தேதி இந்தியா மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணிகள் ஆசிய கோப்பை தொடரில் பலப்பரீட்சை மேற்கொள்ள உள்ளன. இந்நிலையில், பாபரை புகழ்ந்துள்ளார் கோலி. வரும் அக்டோபர் 14-ம் தேதி இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் அகமதாபாத் நகரில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் உலகக் கோப்பை தொடரில் விளையாட உள்ளன.
» கும்பகோணம் | சென்னை சில்க்ஸ் துணிக்கடையில் தீ விபத்து
» மகாராஷ்டிரா | தானே மருத்துவமனையில் 24 மணி நேரத்தில் 18 நோயாளிகள் பலி: விசாரணைக்கு உத்தரவு
“கடந்த 2019 ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் போதுதான் பாபர் அஸம் உடன் முதன் முதலில் பேசி இருந்தேன். அந்த சந்திப்பு இமாத் வாசிம் மூலம் நடந்தது. அவரை நான் அண்டர்-19 கிரிக்கெட் விளையாடிய நாட்களில் இருந்தே அறிவேன். ‘பாபர் உங்களை சந்திக்க விரும்புகிறார்’ என இமாத் தெரிவித்தார். மான்செஸ்டர் போட்டிக்கு பிறகு பாபர் அஸம் உடன் பேசினேன். அவர் வெளிக்காட்டும் மரியாதையில் துளியும் இன்று வரை மாற்றமில்லை.
அவரது ஆட்டத்தை விரும்பிப் பார்ப்பேன். அனைத்து பார்மெட்களிலும் உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேனாக அவர் திகழ்கிறார்” என கோலி தெரிவித்துள்ளார்.
28 வயதான பாபர் அஸம், 49 டெஸ்ட், 100 ஒருநாள் மற்றும் 104 டி20 போட்டிகளில் விளையாடி 12,346 ரன்கள் எடுத்துள்ளார். 30 சதங்கள் மற்றும் 82 அரை சதங்கள் பதிவு செய்துள்ளார். ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் பேட்டிங் தரவரிசையில் முதல் இடத்தில் உள்ளார். டி20 கிரிக்கெட்டில் 3-வது இடம், டெஸ்ட் கிரிக்கெட்டில் 4-வது இடத்திலும் உள்ளார்.