மும்பை: ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பையுடன் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா உற்சாகமாக புகைப்படத்துக்கு போஸ் கொடுத்துள்ளார். அது சமூக வலைதளத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.
இந்தியாவில் வரும் அக்டோபர் 5-ம் தேதி முதல் நவம்பர் 19-ம் தேதி வரை 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற உள்ளது. இந்தத் தொடரில் போட்டியை நடத்தும் இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து, பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்கா, இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான், நெதர்லாந்து உள்ளிட்ட 10 அணிகள் விளையாட உள்ளன.
இந்தச் சூழலில் உலகக் கோப்பையுடன் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா போஸ் கொடுத்துள்ளார். அது ரசிகர்களின் மனதை கவர்ந்துள்ளது. மேலும், தங்கள் கருத்துகளை ரசிகர்கள் சமூக வலைதள பதிவில் பகிர்ந்து வருகின்றனர். ‘நவம்பர் 19-ம் தேதி நடைபெறும் இறுதிப் போட்டியின் முடிவு இது’ என ரசிகர் ஒருவர் கருத்து தெரிவித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணி கடந்த 1983 மற்றும் 2011-ல் ஒருநாள் உலகக் கோப்பை தொடரில் சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. 2007-ல் டி20 உலகக் கோப்பையை வென்றுள்ளது. கடந்த 3 ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர்களில் 2011 - இந்தியா, 2015 - ஆஸ்திரேலியா மற்றும் 2019 - இங்கிலாந்து என தொடரை நடத்திய அணிகள் தான் ஒருநாள் உலகக் கோப்பை தொடரில் சாம்பியன் பட்டம் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
» ஆவடி சாலைகளில் பயணம் அசந்தால் குட்டிக் கரணம்: மோசமான சாலைகளால் திணறும் வாகன ஓட்டிகள்
» போக்கோ எம்6 புரோ 5ஜி ஸ்மார்ட்போன் பட்ஜெட் விலையில் அறிமுகம்: சிறப்பு அம்சங்கள்