லண்டன்: சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார் இங்கிலாந்து வீரர் அலெக்ஸ் ஹேல்ஸ்.
34 வயதான அவர், இங்கிலாந்து அணிக்காக 11 டெஸ்ட், 70 ஒருநாள் மற்றும் 75 டி20 கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி உள்ளார். மொத்தம் 5,066 ரன்கள் எடுத்துள்ளார். கடைசியாக கடந்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பை தொடரில் விளையாடி இருந்தார். அந்தத் தொடரில் இந்திய அணிக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில் 47 பந்துகளில் 86 ரன்களை அவர் எடுத்தது குறிப்பிடத்தக்கது.
கடந்த 2011-ல் சர்வதேச கிரிக்கெட்டில் இங்கிலாந்து அணிக்காக அவர் அறிமுகமாகி இருந்தார். களத்துக்கு வெளியில் அவரது செயல்பாடு காரணமாக அணியில் நிரந்தரமாக இடம் பிடிக்க தவறினார். வெள்ளைப் பந்து கிரிக்கெட் ஃபார்மெட்டின் ஸ்பெஷலிஸ்ட்.
“நாட்டுக்காக 156 போட்டிகளில் விளையாடியதை பாக்கியமாக கருதுகிறேன். என்றென்றும் மறக்க முடியாத சில நினைவுகள் மற்றும் நட்பையும் பெற்றுள்ளேன். இங்கிலாந்து அணியுடனான இந்தப் பயணத்தில் ஏற்றத்தையும், இறக்கத்தையும் எதிர்கொண்டுள்ளேன். இங்கிலாந்து அணிக்காக எனது கடைசிப் போட்டி உலகக் கோப்பையை வென்ற இறுதிப் போட்டியாக அமைந்தது. ஃப்ரான்சைஸ் மற்றும் உள்நாட்டு கிரிக்கெட்டில் கவனம் செலுத்த உள்ளேன்” என ஹேல்ஸ் தெரிவித்துள்ளார்.
» மூன்று ஆண்டுகளில் பிரதமர் 20+ நாடுகளுக்கு பயணம்: திமுக எம்.பி. கேள்விக்கு மத்திய அரசு பதில்
» பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் கைது: ஊழல் வழக்கில் 3 ஆண்டுகள் சிறை