சென்னையில் இன்று தொடங்க உள்ள ஆசிய ஹாக்கி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணியில் இடம் பெற்றுள்ள செல்வம் கார்த்தி மீது அதிக எதிர்பார்ப்பு உள்ளது. 21 வயதான செல்வம் கார்த்தி தமிழகத்தின் அரியலூர் பகுதியை சேர்ந்தவர். கடந்த 2022ம் ஆண்டு நடைபெற்ற ஆசிய கோப்பை தொடரில் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் செல்வம் கார்த்தி அறிமுக வீரராக களமிறங்கினார். அந்த ஆட்டத்தில் கோல் அடித்து போட்டியை டிராவில் முடிக்க செல்வம் கார்த்தி சிறந்த பங்களிப்பை வழங்கினார்.
முன்கள வீரரான செல்வம் கார்த்தி கூறும்போது, “சொந்த மண்ணில் ரசிகர்களின் முன்னால் விளையாட உள்ளதை நினைத்து உற்சாகமாக உள்ளேன். அதேவேளையில் இதை அழுத்தமாகவும் உணர்கிறேன். மைதானத்தில் எனக்கு ஆதரவாக எனது குடும்பத்தினர் இருப்பார்கள், சென்னையில் பணிபுரியும் எனது பெரும்பாலான நண்பர்களும் எனக்கு ஆதரவாக வருவார்கள்” என்றார்.