செங்டு: உலக பல்கலைக்கழக விளையாட்டு போட்டியில் மகளிருக்கான துப்பாக்கி சுடுதலில் இந்தியா தங்கப் பதக்கம் வென்றது.
சீனாவின் செங்டு நகரில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில் மகளிருக்கான 50 மீட்டர் ரைபிள் 3 பொஷிசன் பிரிவில் ஆஷி சவுக்சி, மனினி கவுஷிக் மற்றும் சிஃப்ட் கவுர் சாம்ரா ஆகியோரை உள்ளடக்கிய இந்திய அணி தங்கப் பதக்கம் வென்றது. இந்திய அணி இறுதிப் போட்டியில் 3,527 புள்ளிகள் குவித்து முதலிடம் பிடித்தது. சீன அணி 3,525 புள்ளிகளுடன் வெள்ளிப் பதக்கமும், செக்குடியரசு அணி 3,499 புள்ளிகளுடன் வெண்கலப் பதக்கமும் பெற்றன.
ஆடவருக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் அணிகள் பிரிவில் அர்ஜூன் சிங் சீமா, வருண் தோமர், அன்மோல் ஜெயின் ஆகியோரை உள்ளிடக்கிய இந்திய அணி 1,730 புள்ளிகள் சேர்த்து வெண்கலப் பதக்கம் வென்றது. கொரியா அணி தங்கப் பதக்கமும், சீனா அணி வெள்ளிப் பதக்கமும் வென்றன. ஆடவருக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் தனிநபர் பிரிவில் இந்தியாவின் வருண் தோமர் 7-வது இடம் பிடித்து ஏமாற்றம் அளித்தார்.