துப்பாக்கி சுடுதல் போட்டி: தங்கம் வென்றார் இளவேனில் வாலறிவன்

By செய்திப்பிரிவு

சர்வதேச பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்திய வீராங்கனை இளவேனில் வாலறிவன் தங்கப் பதக்கத்தைக் கைப்பற்றியுள்ளார்.

சீனாவின் செங்டு பகுதியில் `பிஸு' உலக பல்கலைக்கழக விளையாட்டு போட்டிகள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், நேற்று நடைபெற்ற மகளிர் 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் 252.5 புள்ளிகளை இளவேனில் வாலறிவன் எடுத்து முதலிடம் பெற்றார். இதன்மூலம் அவர் தங்கப் பதக்கத்தைத் தட்டிச் சென்றார்.

மகளிர் அணிக்கு தங்கம்

இதேபோல் மகளிர் அணிப் பிரிவில் மனு பாகர், யஷஸ்வினி தேஸ்வால், அபிந்த்யா பாட்டீல் ஆகியோர் அடங்கிய அணி 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் தங்கப் பதக்கம் வென்றது. இதே பிரிவில் சீன அணியினர் வெள்ளியையும், ஈரான் அணியினர் வெண்கலத்தையும் கைப்பற்றினர்.

மகளிர் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் மனு பாகர் தங்கம் வென்றார். இதே பிரிவில் ஹங்கேரி வீராங்கனை ஃபேபியன் சாரா வெள்ளியையும், சீன தைபே வீராங்கனை யு-ஜு ஜென் வெண்கலப் பதக்கத்தையும் வசப்படுத்தினர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE