WI vs IND | “அஸ்வின் தான் எனது தொடர் நாயகன்” - ஜாகீர் கான்

By செய்திப்பிரிவு

மும்பை: இந்தியா மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் அணிகள் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடின. இதில் 1-0 என்ற கணக்கில் இந்தியா வென்றது. இரண்டாவது போட்டி மழை காரணமாக டிரா ஆனது.

இந்தத் தொடரில் இந்திய அணி வீரர்களின் ஆதிக்கம் அதிகம் இருந்தது. அது பேட்டிங், பவுலிங் என இரண்டிலும் இருந்ததை பார்க்க முடிந்தது. இளம் வீரர் ஜெய்ஸ்வால் இரண்டு போட்டிகளையும் சேர்த்து 266 ரன்கள் சேர்த்திருந்தார். கேப்டன் ரோகித் 240 ரன்கள், விராட் கோலி 197 ரன்கள் எடுத்திருந்தனர். பந்து வீச்சாளர்களில் அதிகபட்சமாக அஸ்வின் 15 விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தார்.

இந்நிலையில், அஸ்வின் தான் இந்தத் தொடரில் தனது தொடர் நாயகன் என முன்னாள் இந்திய வீரர் ஜாகீர் கான் தெரிவித்துள்ளார். இந்தத் தொடரில் தொடர் நாயகன் விருது வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஒரு இன்னிங்ஸில் பேட் செய்து 56 ரன்களும் எடுத்திருந்தார் அஸ்வின். “இந்தத் தொடரில் தொடர் நாயகன் விருது இருந்திருந்தால் அது அஸ்வினுக்கு வழங்கப்பட்டு இருக்க வேண்டும். அவர் அதற்கு தகுதியானவர்” என்று ஜாகீர் கான் தெரிவித்துள்ளார்.

டிராவால் குறைந்த புள்ளிகள்... - போர்ட் ஆஃப் ஸ்பெயின் டெஸ்ட் போட்டியின் கடைசி நாள் ஆட்டம் மழை காரணமாக ரத்தானது. இதனால் போட்டி டிராவில் முடிவடைந்தது. இது இந்திய அணி வீரர்களுக்கு ஏமாற்றமாக அமைந்தது. ஏனெனில் போட்டி நடைபெற்று முடிவு இந்திய அணிக்கு சாதகமாக கிடைத்திருந்தால் முழுமையாக 12 புள்ளிகள் கிடைத்திருக்கும். தற்போது டிரா ஆனதால் 4 புள்ளிகள் மட்டுமே இந்திய அணிக்கு கிடைத்துள்ளது. இதன் மூலம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிகள் பட்டியலில் இந்திய அணி 16 புள்ளிகளை பெற்றுள்ள போதிலும் வெற்றி சராசரியின் (66) அடிப்படையில் 2-வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது.

அதேவேளையில் பாகிஸ்தான் அணி 12 புள்ளிகளுடன் வெற்றி சராசரி 100 உடன் முதல் இடத்தில் உள்ளது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் இந்திய அணிக்கு அடுத்து வரும் இரு தொடர்களும் கடும் சவால் நிறைந்ததாக இருக்கும். வரும் டிசம்பரில் இந்திய அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து 2 டெஸ்டில் விளையாடுகிறது. தொடர்ந்து ஆஸ்திரேலியா சென்று 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட திட்டமிட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE