சென்னை: எதிர்வரும் அக்டோபர் 15-ம் தேதி இந்தியா மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணிகள் குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் உலகக் கோப்பை தொடரில் விளையாட உள்ளன. இந்நிலையில், இந்த போட்டிக்கான தேதி மாற்றியமைக்க வாய்ப்பிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்த போட்டி நடைபெறும் நாட்களில் அகமதாபாத் நகரில் அமைந்துள்ள தங்கும் விடுதிகளின் கட்டணம் அதிகம் இருப்பதாக சொல்லப்பட்டது. அது குறித்த செய்திகளும் வெளிவந்தன. விமானக் கட்டணமும் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக சொல்லப்பட்டுள்ளது. ரசிகர்கள் இந்த போட்டியை காணும் வகையில் முன்கூட்டியே திட்டமிட்டு வருகின்றனர். இந்த சூழலில் இந்த தகவல் வெளியாகி உள்ளது. இரு நாட்டு ரசிகர்கள் மட்டுமல்லாது கிரிக்கெட் ஆர்வலர்கள் பலரும் இந்த போட்டியை ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர்.
மாற்றம் ஏன்? அக்டோபர் 15-ம் தேதி அன்று நடைபெற உள்ள இந்த போட்டி குறித்து இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்திடம் பாதுகாப்பு முகமைகள் முக்கியமான தகவலை தெரிவித்துள்ளதாம்.
போட்டி நடைபெறும் அந்த தேதியில் நவராத்திரி விழா நடைபெறுவதாக சொல்லப்பட்டுள்ளது. அதனால் போட்டியை வேறு தேதிக்கு மாற்றுவது தொடர்பாக விரைவில் இறுதி முடிவு எடுக்கப்படும் என சொல்லப்பட்டுள்ளது. பாதுகாப்பு காரணங்களால் மட்டுமே மாற்றம் இருக்க வாய்ப்பு என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.