IND-W vs BAN-W | பொதுவான நடுவர்களை நியமிப்பது குறித்து முடிவு செய்ய வேண்டும்: ஸ்மிருதி மந்தனா

By செய்திப்பிரிவு

டாக்கா: இரு நாடுகளுக்கு இடையிலான தொடர்களில் பொதுவான நடுவர்களை நியமிப்பது குறித்து முடிவு செய்ய வேண்டும் என இந்திய அணியின் துணை கேப்டன் ஸ்மிருதி மந்தனா வலியுறுத்தியுள்ளார்.

வங்கதேச அணிக்கு எதிரான 3-வது ஒருநாள் போட்டி சமன் ஆனதாக அறிவிக்கப்பட்டது. 1-1 என்ற கணக்கில் இரு அணிகளுக்கும் கோப்பை பகிர்ந்து அளிக்கப்பட்டது. கடைசி போட்டியில் இந்திய கேப்டன் ஹர்மன்பிரீத்துக்கு கொடுக்கப்பட்ட அவுட், அவர் களத்தில் அதிருப்தியை வெளிப்படுத்திய விதம் மற்றும் போட்டிக்கு பிறகு பரிசளிப்பு விழாவில் அவர் நடந்து கொண்ட விதமும் சர்ச்சையானது.

“சில போட்டிகளில் இது போல நடக்கும். அது நமக்கு மகிழ்வை தராது. அதுவும் இந்த தொடரில் டிஆர்எஸ் இல்லை. நடுவர்கள் சில முடிவுகளை எடுக்கும் போது அது சிறப்பான முறையில் இருக்க வேண்டும். சில முடிவுகளில் இரண்டாவது முறையாக யோசிக்க வேண்டி இருக்கும். ஆனால் அப்படி எதுவும் யோசிக்காமல் கொடுக்கப்பட்ட அவுட் அது.

ஐசிசி, பிசிசிஐ மற்றும் வங்கதேச கிரிக்கெட் வாரியம் இது குறித்து ஆலோசித்து, இரு நாடுகளுக்கு இடையிலான தொடர்களில் பொதுவான நடுவர்களை நியமிப்பது குறித்து முடிவு செய்ய வேண்டி உள்ளது. அது நல்ல முடிவாக இருக்கும் என நம்புகிறேன்.

களத்தில் நடந்தது ஆட்டத்தின் ஒரு பகுதி. இதற்கு முன்பும் இப்படி நடந்துள்ளது. இந்தியாவுக்காக விளையாடும் போது வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்பு இருக்கும். அப்படி இருக்கும் போது இப்படி சில நடக்கும். ஹர்மன்பிரீத் குறித்து நான் நன்கு அறிவேன். ஏதோ ஒரு வேகத்தில் அவர் அப்படி செய்துவிட்டார்” என ஸ்மிருதி மந்தனா தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE