போர்ட் ஆஃப் ஸ்பெயின்: இந்தியா - மேற்கு இந்தியத் தீவுகள் இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் இரண்டாவது நாளான இன்று விராட் கோலி சதமடித்து அசத்தினார். சர்வதேச அரங்கில் அது அவரது 500-வது ஆட்டமாகும்.
இந்தியா - மேற்கு இந்தியத் தீவுகள் இடையிலான டெஸ்ட் போட்டி நேற்று (ஜூன்20) போர்ட் ஆஃப் ஸ்பெயினில் தொடங்கியது. முதல் நாள் ஆட்ட நேர முடிவின் போது இந்திய அணி 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 288 ரன்கள் எடுத்திருந்தது.
இந்த போட்டி இரு அணிகளுக்கும் இடையிலான 100-வது போட்டியாக அமைந்தது. அதேவேளையில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலிக்கு இந்த போட்டி சர்வதேச அரங்கில் 500-வது ஆட்டமாக அமைந்தது. பேட்டிங்கை தொடங்கிய இந்திய அணிக்கு யஷஸ்வி ஜெய்ஸ்வால், கேப்டன் ரோஹித் சர்மா ஜோடி அதிரடி தொடக்கம் கொடுத்தது.
இருவரும் முதல் விக்கெட்டுக்கு 139 ரன்கள் சேர்த்தனர். யஷஸ்வி ஜெய்ஸ்வால் 74 பந்துகளில், 1 சிக்ஸர், 9 பவுண்டரிகளுடன் 57 ரன்கள் எடுத்து வெளியேறினார். சுப்மன் கில், 10 ரன்களில் ஆட்டமிழந்தார். கேப்டன் ரோஹித் சர்மா 80 ரன் எடுத்து ஆட்டமிழந்தார். ரஹானே, 8 ரன்களில் வெளியேறினார். பின்னர் விராட் கோலியும், ஜடேஜாவும் கூட்டணி அமைத்து அதிரடி காட்டினர். முதல் நாள் ஆட்ட நேர முடிவில் கோலி 87 ரன்களுடனும், ஜடேஜா 36 ரன்களுடனும் இருந்தனர்.
இந்நிலையில் இன்று இரண்டாவது நாள் ஆட்டம் தொடங்கியதும் விராட் கோலி சிறப்பாக ஆடி 181 பந்துகளில் 102 ரன்களை கடந்து சதமடித்தார். சர்வதேச அரங்கில் 500வது போட்டியில் அவர் சதமடித்திருப்பது ரசிகர்களுக்கு உற்சாகத்தை கொடுத்தது. மொத்தமாக அவர் தனது 79வது சதத்தை விளாசியிருப்பது குறிப்பிடத்தக்கது. ஷானன் கேப்ரியல் வீசிய அதே ஓவரில் ஜடேஜாவும் 106 பந்துகளில் அரைசதம் கடந்தார். தற்போது இந்திய அணி 4 விக்கெட்டுகளை இழந்து 330 ரன்களுடன் விளையாடி வருகிறது.