இந்தியப் பிட்சையும் போட்டு டாஸ் வென்று முதலில் பேட்டிங்கையும் தாரைவார்த்த வெஸ்ட் இண்டீஸ் - ஏன் இப்படி?

By ஆர்.முத்துக்குமார்

ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் வந்த பிறகே அனைத்து அணிகளுமே தங்கள் உள்நாட்டு சாதகங்களை தங்களுக்குப் பக்கபலமாக அமைத்துக் கொண்டு வெற்றி பெற்று புள்ளிகளைப் பெறும் இந்தக் காலத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணி மட்டும் நேற்று பாரம்பரியப் புகழ் மிக்க போர்ட் ஆஃப் ஸ்பெயின் மைதானத்தில் பிட்சை இந்திய பிட்ச் போலவே அமைத்து. டாஸ் வென்றும் அதை இந்திய அணியை முதலில் பேட் செய்ய அழைத்து சாதகங்களை தாரை வார்த்ததை என்னவென்று புரிந்து கொள்வதென்று தெரியவில்லை.

இதைப் பலவிதங்களில் புரிந்து கொள்ளலாம். ஒன்று நாம் அனைவரும் நினைக்கும் பொதுவான, அறிந்த காரணம், டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் முதலில் பேட் செய்ய முடிவெடுத்து போன டெஸ்ட் போட்டி போல் 3 நாட்களில் முடிந்து விட்டால் அது மே.இ.தீவுகள் அணிக்கு பெரிய அவமானத்தைத் தேடித்தரும். அதனால் முதலில் இந்திய அணியை பேட் செய்ய அழைத்தார்கள் என்று கூற முடிவது.

இரண்டாவது காரணம் வர்த்தக ரீதியானதாக இருக்கலாம். இந்தத் தொடருக்கான ஒளிபரப்பு உரிமையை எடுத்துள்ள தொலைக்காட்சி நிறுவனத்துக்கு 5 நாட்கள் நடக்காததால் ஏற்படும் நஷ்டத்தை யோசித்தும், இந்தத் தொடருக்கே பொதுவாக இல்லாத டிஆர்பி ரேட்டிங்கை உயர்த்தவும் டாஸ் வென்றால் இந்திய அணியை பேட் செய்யச் சொல்லுங்கள் என்பது மேற்கிந்திய அணி நிர்வாகத்தின் ஒட்டுமொத்த முடிவாக இருக்கலாம்.

மூன்றாவதாக இந்திய நேரப்படி ஒருவேளை இந்திய அணி நள்ளிரவுக்கு மேல் பேட் செய்ய நேரிட்டால் பார்ப்பதற்கு ஆளில்லாமல் போய் விடுகிறது. இதனால் முதல் நாள் நல்ல இந்திய ரக பிட்சில் ரோஹித் சர்மா, ஜெய்ஸ்வால், கோலியைப் பார்க்க இந்திய ரசிகர்கள் விரும்புவார்கள். வர்த்தக ரீதியாகவும் டிவி நிறுவனத்துக்கு லாபகரமானதாக இருக்கும் என்று மேற்கிந்திய தீவுகள் தரப்பில் யோசிக்கப்பட்டிருக்கலாம். மேலும் பிசிசிஐ-யின் செல்லப்பிள்ளை மேற்கிந்திய தீவுகள், பிசிசிஐ-யினால் மே.இ.தீவுகள் நிதியளவில் நிறைய பயனடைந்திருக்கிறது என்ற காரணத்தையும் பரிசீலிக்காமல் இருக்க முடியவில்லை.

ட்ரினிடாட் அண்ட் டுபாகோவில் சச்சின் டெண்டுல்கர் 1997-ம் ஆண்டு தொடரில் ஒருநாள் போட்டி ஒன்றில் 44 ரன்களை அடிப்பார் அது இப்போது பாஸ்பால் என்று பிரபலப்படுத்தப்படும் வகையறாவை அப்போதே செய்த இன்னிங்ஸ். பந்துகள் எகிறும் பிட்சில். ஆம்புரோஸ், வால்ஷ், இயன் பிஷப் உள்ளிட்டோரை சச்சின் வெளுத்து வாங்குவார், அதுவும் பிஷப் பந்தில் ஹெல்மெட்டில், கையில் வாங்கிய பிறகு சச்சின் மேலேறி வந்து ஸ்பின்னரை அடிப்பது போல் 4 பவுண்டரிகளை விளாசுவது பார்க்கக் கண்கொள்ளாக்காட்சி. 44 ரன்கள் எடுத்து மே.இ.தீவுகள் செய்த பீல்ட் செட்-அப்பையே கலங்கடித்தார் சச்சின் டெண்டுல்கர், மே.இ.தீவுகள் ரசிகர்களுக்கு இன்னொரு விவியன் ரிச்சர்ட்ஸைப் பார்ப்பது போன்ற அனுபவத்தை சச்சின் கொடுத்துக் கொண்டிருக்கையில் இந்திய ரசிகர்கள் மூக்கின் மேல் விரல் வைத்துப் பார்க்கும் போது நடுவரின் மோசமான தீர்ப்பினால் சச்சின் ஆட்டமிழ்ந்து செல்வார்.

அந்த இன்னிங்ஸை இப்போது இந்திய தலைமைப் பயிற்சியாளராக இருக்கும் ராகுல் திராவிட் நினைவு கூர்ந்துள்ளார். அதாவது ‘அந்த இன்னிங்ஸை நான் எப்போதும் மறக்க மாட்டேன்’ என்கிறார் திராவிட். அப்போது 26 ஆண்டுகளுக்கு முன்பிருந்த எந்த ஒரு எகிறு பந்து ஆபத்தும் இல்லாத பிட்ச்தான் நேற்று போடப்பட்டது. அதான்! இந்தியாவுக்குச் சாதகமான பிட்ச். ஆனால் இந்தப் பிட்சில் மே.இ.தீவுகளும் பேட் செய்திருக்கலாம். ஆனால் இந்திய அணியை ஆடச் செய்தது இந்திய அணியின் விருப்பத்துக்கு ஏற்ப அவர்களே தெரிந்தெடுத்த தெரிவு போல்தான் தெரிகிறது.

பந்துகளில் பக்கவாட்டு ஸ்விங்கும் இல்லை, பவுன்ஸும் இல்லை. பொதுவாக மே.இ.தீவுகள் மற்ற துணைக்கண்ட அணிகளுக்கும் இங்கிலாந்துக்கும் கிரீன் டாப் அல்லது பவுன்ஸ் பிட்ச்களைப் போடுவதுதான் வழக்கம். இந்தியாவை விட பலவீனமான அணியான வங்கதேசத்துக்கு எதிராக 2018-ல் போடப்பட்ட பிட்ச் பயங்கரமானது வங்கதேசம் முதல் டெஸ்ட் முதல் இன்னிங்ஸிலேயே 44 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது 2வது இன்னிங்ஸில் 144 ரன்களுக்கு சுருண்டு இன்னிங்ஸ் தோல்வி கண்டது. இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் தோல்வி கண்டது வங்கதேசம்.

2022 வங்கதேசம் மே.இ.தீவுகளுக்குச் சென்ற போதும் வேகமான எகிறு பிட்ச்களே போடப்பட்டன. 2021-ல் பாகிஸ்தானுக்கும் நல்ல பவுலிங் சாதக பிட்ச்தான் போடப்பட்டது, 2018-ல் இலங்கைக்கு எதிராகவும் ஸ்பைசி பிட்ச்தான் போடப்பட்டது. இந்தியாவுக்கு மட்டும் இந்தியா போன்ற பிட்சைப் போட்டு சலுகை அளிப்பது ஏன் என்பதுதான் புரியாத புதிராக உள்ளது. புதிராக உள்ளது என்றால் முற்றிலும் புரியாமல் இல்லை, ஆனால் நமக்குப் புரிந்தது அனைத்தையும் சொல்லிவிட முடியுமா என்ன?

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE