WI vs IND முதல் டெஸ்ட் | 150 ரன்களுக்கு ஆல் அவுட்டான மே.இ. தீவுகள் - ரோகித், ஜெய்ஸ்வால் நிதானம்

By செய்திப்பிரிவு

டொமினிகா: இந்தியா - மேற்கு இந்தியத் தீவுகள் அணிகள் இடையிலான 2 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டி டொமினிகாவில் நேற்று தொடங்கியது.

இதில் டாஸ் வென்ற மேற்கு இந்தியத் தீவுகள் அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் ஆடிய மேற்கு இந்தியத் தீவுகள் அணி வீரர்கள் இந்திய பவுலர்கள் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் விரைவாகவே வீழ்ந்தனர். குறிப்பாக அஸ்வின் மற்றும் ஜடேஜாவின் சுழற்பந்து வீச்சை எதிர்கொள்வதில் தடுமாறினர்.

இதனால் முதல் இன்னிங்ஸில் 64.3 ஓவரில் 150 ரன்களுக்கு ஆல் அவுட்டானது அந்த அணி. மேற்கு இந்தியத் தீவுகளின் ஆலிக் அதானஸ் மட்டும் ஓரளவு தாக்குப்பிடித்து 47 ரன்கள் எடுத்தார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களுக்கு அவுட்டாகினர்.

இந்தியா சார்பில் அஸ்வின் 5 விக்கெட், ஜடேஜா 3 விக்கெட், சிராஜ், ஷர்துல் தாக்குர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

இதன்பின், முதல் இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணிக்கு தொடக்க ஆட்டக்காரர்களாக யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் ரோகித் சர்மா களமிறங்கினர். இருவரும் நிதானமாக ஆடி ரன் குவிப்பில் ஈடுபட்டனர். இதனால் முதல் நாள் ஆட்ட நேர முடிவில், இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 80 ரன்கள் எடுத்துள்ளது. ஜெய்ஸ்வால் 40 ரன்களுடனும் , ரோகித் சர்மா 30 ரன்களுடனும் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE