விளையாட்டு போட்டிகளை மேம்படுத்த சிப்காட் சார்பில் ரூ.2 கோடி நிதி

By செய்திப்பிரிவு

சென்னை: விளையாட்டு போட்டிகளை மேம்படுத்துவதற்காகவும், உபகரணங்களை கொள்முதல் செய்வதற்காகவும் ரூ.2 கோடி நிதியை சிப்காட் வழங்கியுள்ளது.

தமிழக முதல்வரின் முயற்சியால் தொழில் துறையில், இந்திய அளவில் மட்டுமல்லாமல் உலக அளவிலான கவனத்தையும் தமிழகம் மிகவும் ஈர்த்துள்ளது.

இந்நிலையில் விளையாட்டுப் போட்டிகளை மேம்படுத்துவதற்காகவும், விளையாட்டு உபகரணங்கள் கொள்முதல் செய்வதற்காகவும் தமிழக அரசின் தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறையின் சிப்காட் நிறுவனம், நிறுவன சமூக பொறுப்புடைமை செயல்பாடுகளின் (சிஎஸ்ஆர்) நிதியின் கீழ் ரூ.2 கோடிக்கான காசோலையை முதல்வரால் தொடங்கி வைக்கப்பட்ட ‘தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளைக்கு’ நேற்று வழங்கியது. இதற்கான காசோலையை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம், தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா வழங்கினார்.

அப்போது, தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை செயலாளர் ச.கிருஷ்ணன், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை செயலாளர் அதுல்ய மிஸ்ரா, தமிழ்நாடு தொழில் மேம்பாட்டு நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் எ.சுந்தரவல்லி, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் ஜெ.மேகநாத ரெட்டி, சிப்காட் நிறுவனத்தின் செயல் இயக்குநர் நிஷாந்த் கிருஷ்ணா ஆகியோர் உடன் இருந்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE