ரிங்கு சிங் சிறந்த தேர்வாக நிச்சயம் இருந்திருப்பார் - ஆகாஷ் சோப்ரா கருத்து

By செய்திப்பிரிவு

மும்பை: எதிர்வரும் மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது. ஹர்திக் பாண்டியா தலைமையில் 15 பேர் கொண்ட டி20 தொடருக்கான இந்திய அணியை பிசிசிஐ வெளியிட்டது.

இந்த அணியில் ரிங்கு சிங் இடம் பெறவில்லை. அது குறித்து ரசிகர்கள் சமூக வலைதளத்தில் கேள்வி எழுப்பி இருந்தனர். இந்நிலையில், முன்னாள் இந்திய வீரர் ஆகாஷ் சோப்ரா இது குறித்து தனது கருத்தை தெரிவித்துள்ளார். யூடியூப் தளத்தில் இது குறித்து வீடியோ ஒன்றில் ஆகாஷ் சோப்ரா பேசியுள்ளார். அதில், “இந்திய அணியின் நடு வரிசையில் சூர்யகுமார் யாதவ், சஞ்சு சாம்சன், திலக் வர்மா, ஹர்திக் பாண்டியா ஆகியோர் பேட் செய்யலாம். நிச்சயம் திலக் வர்மாவை மூன்றாவது பேட்ஸ்மேனாக விளையாட வைக்கும் யோசனை அணிக்கு இருக்காது. அவர் ஹர்திக் பாண்டியாவிற்கு பிறகு பேட் செய்ய வருகிறார் என்றால் அதற்கு ரிங்கு சிங் தான் சிறந்த தேர்வாக நிச்சயம் இருந்திருப்பார். டாப் மூன்று பேட்ஸ்மேன்களில் இஷான் கிஷன் அல்லது சஞ்சு சாம்சன் விளையாடுவார்கள். அது தான் அவர்கள் பேட் செய்ய ஏற்ற இடமும் கூட. சூர்யகுமார் யாதவ் டாப் 4 பேட்ஸ்மேன்களில் ஒருவராக விளையாடுவார்.

ஹர்திக் 5-ம் இடத்திலும், திலக் வர்மா 6-ம் இடத்திலும் பேட் செய்ய வேண்டி இருக்கும். அந்த இடத்திற்கு திலக் வர்மா, சரி வருவாரா என்பது தான் எனது கேள்வி. அவர் டாப் ஆர்டரில் சிறப்பாக விளையாடக் கூடிய வீரர். இதை கடந்த ஐபிஎல் சீசனில் நாம் பார்த்திருந்தோம். அதே சீசனில் கேமரூன் கிரீன் டாப் ஆர்டரில் ஆடி இருந்தார். அதனால் திலக் பின்வரிசையில் ஆடினார். ஆனால், இந்திய அணியில் அவர் பின்வரிசையில் ஆடுவதற்காக தேர்வாகி இருந்தால் நிச்சயம் அதற்கு ரிங்கு தான் சரியான நபர்” என ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார். ரிங்கு சிங் கடந்த சீசனில் கொல்கத்தா அணிக்காக பின்வரிசையில் அபாரமாக ஆடி இருந்தார். அதுவும் குஜராத் அணிக்கு எதிரான லீக் போட்டியில் கடைசி ஓவரில் 5 சிக்ஸர்களை விளாசி இருந்தார். அவரது மேட்ச் வின்னிங் திறன் கடந்த சீசனில் கவனம் பெற்றது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE