தலையில் அடிவாங்கி ‘பதிலி வீரர்’ பெறுவதற்காக லயன் களமிறக்கப்பட்டாரா? - எழும் சர்ச்சைகள்

By ஆர்.முத்துக்குமார்

நேதன் லயன் தீவிர காயமடைந்து அவர் களத்திற்கே வரவில்லை எனும் போது, நேற்று 4-ம் நாள் ஆட்டத்தில் கடைசியில் ஒரு அடி எடுத்து வைக்க முடியாத நேதன் லயனை கடைசியில் இறக்கியது லயனின் அசாத்திய தைரியம் என்று பாராட்டப்பட்டாலும் இது தேவையற்றது என்ற விமர்சனங்களும், அனைத்திற்கும் மேலாக தலையில் அடிபட்டு மூளை அதிர்ச்சி ஏற்பட்டால்தான் லெவனில் புதிய பதிலி வீரரை ஆட வைக்க முடியும் மற்ற காயங்களினால் ஆட முடியாமல் போனால் பதிலி வீரர் கிடையாது.

இந்நிலையில் நேதன் லயன் நேற்று இறக்கப்பட்டது, இங்கிலாந்து தொடர்ச்சியாக ஷார்ட் பிட்ச் பவுலிங்கை வீசி வரும் நிலையில் நேதன் லயனை ஹெல்மெட்டில் ஒரு பந்தை வாங்க வைத்து ‘கன்கஷன்’ என்று கூறி இன்னொரு ஸ்பின்னரை பதிலி வீரராக பவுலிங் செய்ய வைக்க ஆஸ்திரேலியா திட்டமிட்டதாக கடும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

அவர் கக்கத்தில் ஊன்று கோலைத் தாங்கியபடிதான் காணப்பட்டார், ஆனால் திடீரென பேட்டிங்கில் இறங்கியது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியதாக ஆஸ்திரேலிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. அவர் இறங்கி மிட்செல் ஸ்டார்க்குடன் 15 ரன்களை சேர்த்தது தைரியத்தின் உச்சக் கட்டம், நாட்டுக்காக தன் கரியரையே ரிஸ்க் எடுக்கிறார் லயன் என்றெல்லாம் புகழப்பட்டாலும், இந்த நிலைமையில் அவரை இறக்கியது இன்னொரு பதிலி வீரரை இறக்குவதற்காக இருக்குமோ என்ற ஐயங்கள் எழுந்துள்ளன.

நேதன் லயன் இது தொடர்பாகக் கூறும் போது, “காயத்தினால் நான் உடைந்து போய் விட்டேன், கண்ணீர் முட்டியது. இந்த அணி தான் எனக்குப் பெரிது. இறங்கி ஆடுவது எத்தனை பெரிய ரிஸ்க் என்று எனக்குத் தெரியும். என் அணிக்காக நான் எவ்வளவு பெரிய ரிஸ்க்கையும் எடுக்கத் தயார். களமிறங்கியதை நினைத்துப் பெருமைப்படுகிறேன். மீண்டும் ஒருமுறை இறங்கி ஆடச்சொன்னாலும் ஆடுவேன்” என்றார்.

இங்கிலாந்து முன்னாள் கேப்டன் ஆண்ட்ரூ ஸ்ட்ராஸ் கூறும்போது, “இப்படி அவரை இறக்குவதால் ஆன பயன் என்ன? அவரால் ஒரு ரன் கூட ஓட முடியாது. எனவே இது தேவையற்றது. இறங்கியது தைரியம் என்பதெல்லாம் சரி, ஆனால் ரன் அடிக்க முடியவில்லை எனில் விரயம்தானே” என்கிறார்.

ஆனால் பதிலி வீரரைப் பெறுவதற்காக நேதன் லயன் இறக்கப்பட்டார் என்ற குற்றச்சாட்டிற்கு லயன் கூறும் போது, “நான் இறங்கி தலையில் காயம் அடைந்து பதிலி வீரரை இறக்குவதற்காக ஆடுவேன் என்பது போன்ற கருத்துக்களை நானும் கேட்க நேர்ந்தது. தலையில் அடிவாங்கி என் சகா (பிலிப் ஹியூஸ்) ஒருவரை கிரிக்கெட் மைதானத்திலேயே பறி கொடுத்தோம். எனவே நான் போய் தலையில் அடிவாங்கி பதிலி வீரரைக் கொண்டு வருவதற்காக பிரயத்தனப்பட்டேன் என்பது முட்டாள்தனமானது. நான் உள்ளபடியேதான் கூறுகிறேன். ‘நான்-சென்ஸ்’. ஏனெனில் பதிலி வீரருக்காக தலையில் அடிவாங்குவது என்பது பெரிய ரிஸ்க்” என்று சந்தேகங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்தார் நேதன் லயன்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE