TNPL | சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியை வென்றது சீகம் மதுரை பேந்தர்ஸ்: அஜய் கிருஷ்ணா அபாரம்!

By செய்திப்பிரிவு

சேலம்: நடப்பு டிஎன்பிஎல் சீசனில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியை 12 ரன்கள் வித்தியாசத்தில் வென்றுள்ளது சீகம் மதுரை பேந்தர்ஸ் அணி. அந்த அணிக்காக பேட்டிங்கில் வாஷிங்கடன் சுந்தரும், பந்துவீச்சில் அஜய் கிருஷ்ணாவும் அசத்தினார்.

இந்தப் போட்டி சேலத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற சேப்பாக் அணி, மதுரையை பேட் செய்ய பணித்தது. அதன்படி முதலில் பேட் செய்த மதுரை அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 141 ரன்கள் எடுத்தது.

தொடக்கத்தில் அந்த அணி 18 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. 9 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 46 ரன்களை எடுத்திருந்தது. அப்போது களத்திற்கு வந்த வாஷிங்கடன் சுந்தர், 30 பந்துகளில் 56 ரன்களை குவித்து அசத்தினார். 2 பவுண்டரி மற்றும் 5 சிக்ஸர்களை அவர் விளாசினார். இறுதிவரை ஆட்டமிழக்காமல் தனது அணி ஓரளவுக்கு டீசன்டான ரன்களை எட்ட உதவினார்.

142 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை சேப்பாக் அணி விரட்டியது. முதல் விக்கெட்டிற்கு 59 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர் தொடக்க ஆட்டக்காரர்களான சந்தோஷ் மற்றும் நாராயண் ஜெகதீசன். அதன் பின்னர் அந்த அணி சரிவை எதிர்கொண்டது. சீரான இடைவெளியில் சேப்பாக் வீரர்களை வெளியேற்றினர் மதுரை பவுலர்கள். முருகன் அஸ்வின், 4 ஓவர்கள் வீசி 25 ரன்கள் கொடுத்து, 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

டெத் ஓவர்களை மதுரை அணியினர் சிறப்பாக வீசி எதிரணியின் ரன் குவிப்பை கட்டுப்படுத்தினர். 19-வது ஓவரை வீசிய அஜய் கிருஷ்ணா, 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். அந்த ஓவரில் 4 ரன்கள் மட்டுமே கொடுக்கப்பட்டது. இறுதி ஓவரில் சேப்பாக் அணியின் வெற்றிக்கு 15 ரன்கள் தேவைப்பட்டது. ஆனால், அந்த ஓவரில் 2 ரன்கள் மட்டுமே கொடுத்து ஒரு விக்கெட்டை கைப்பற்றினார் குர்ஜப்நீத் சிங். 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 129 ரன்கள் எடுத்தது சேப்பாக்.

நடப்பு சீசனில் தொடர்ச்சியாக 4 போட்டிகளில் தோல்வியை தழுவி உள்ளது சேப்பாக் அணி. அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களான சந்தோஷ், நாராயண் ஜெகதீசன் மற்றும் பாபா அபராஜித் மட்டுமே இரட்டை இலக்க ரன்களை கடந்தனர். மற்ற அனைவரும் ஒற்றை இலக்க ரன்களில் வெளியேறினார். நடப்பு சீசனில் மதுரை அணிக்கு இது இரண்டாவது வெற்றியாக அமைந்துள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE