பெர்லின்: 202 பதக்கங்களை வென்று நடப்பு ஆண்டின் சிறப்பு ஒலிம்பிக்கை நிறைவு செய்துள்ளது இந்தியா. 76 தங்கம், 75 வெள்ளி மற்றும் 51 வெண்கல பதக்கங்கள் இதில் அடங்கும். இந்திய தடகள வீரர்கள் கடைசியாக இதில் தங்கள் பங்காக 6 பதக்கங்களை அறுவடை செய்தனர்.
ஜெர்மனியில் உள்ள பெர்லின் நகரில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் இந்தியா இந்த 202 பதக்கங்களை வென்றுள்ளது. தடகளம், சைக்கிள் பந்தயம், பளு தூக்குதல், ரோலர் ஸ்கேட்டிங், நீச்சல் ஆகிய பிரிவுகளில் இந்திய வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர். 190 நாடுகளை சேர்ந்த 7,000 வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் சுமார் 26 வகையான விளையாட்டுகளில் இதில் பங்கேற்றனர்.
“நம் நாட்டின் விளையாட்டு வீரர்களான இவர்கள் பல்வேறு வகைகளில் சமூக ரீதியான பாகுபாட்டினை எதிர்கொண்டுள்ளனர். விளையாட்டு களத்தில் தங்களது அசாத்திய திறனை வெளிப்படுத்தியவர்கள் இவர்கள். பலம், வேகம், கவனம், ஒழுக்கத்தில் சிறந்தவர்கள் இவர்கள். அதை களத்தில் நிரூபித்துள்ளனர். இந்த விளையாட்டு வீரர்களை பரவலாக அனைவரும் ஏற்றுக் கொள்ள வேண்டியது அவசியம்” என இந்திய அணியின் சிறப்பு ஒலிம்பிக் தலைவர் டாக்டர் மல்லிகா நாடா தெரிவித்துள்ளார்.