'நான் ஹெல்மெட்டை வீசியதற்காக வருந்துகிறேன்' - ஆர்சிபி உடனான போட்டி குறித்து ஆவேஷ் கான்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: அண்மையில் நடந்து முடிந்த ஐபிஎல் சீசனில் பெங்களூருவில் நடைபெற்ற போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிராக லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி வெற்றி பெற்றது. அப்போது, ஆவேசமடைந்த லக்னோ வீரர் ஆவேஷ் கான் தான் அணிந்திருந்த ஹெல்மெட்டை தரையில் வீசி இருந்தார். இந்நிலையில், தற்போது அதற்கு வருத்தம் தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் 2023 சீசனில் 15-வது லீக் போட்டியில் 212 ரன்கள் குவித்தது ஆர்சிபி அணி. 213 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை லக்னோ விரட்டியது. 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 213 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது லக்னோ. கடைசிப் பந்தில் இந்த வெற்றியை அந்த அணி பதிவு செய்தது. ஹர்ஷல் படேல் வீசிய கடைசி ஓவரில் பை ரன் எடுத்து லக்னோ வெற்றி பெற்றது. அப்போது ஸ்ட்ரைக்கில் ஆவேஷ் கான் இருந்தார்.

அந்தத் தருணத்தில் களத்தில் இருந்த ஆவேஷ் கான், தான் அணிந்திருந்த ஹெல்மெட்டை தரையில் வீசி இருந்தார். லக்னோ அணியினர் அப்படியே கொண்டாட்டத்தில் மூழ்கி இருந்த நேரம் இது. இருந்தாலும் ஐபிஎல் நடத்தை விதிகளை அவர் மீறி இருந்தார்.

“நான் களத்தில் அப்படி செய்திருக்கக் கூடாது என்பதை போட்டி முடிந்த பின்னர் தான் உணர்ந்தேன். அது அந்த தருணத்தில் நடந்தது. அவ்வளவு தான். இருந்தாலும் அதற்காக நான் வருந்துகிறேன். அண்மையில் முடிந்த சீசன் எனக்கு சிறப்பானதாக அமையவில்லை. இருந்தாலும் 10 ரன்களுக்கு குறைவான எக்கானமி ரேட், 4 அல்லது 5-வது ஓவரை பவர்பிளே ஓவர்களின் போது வீசியதும், டெத் ஓவர்களும் வீசி இருந்தேன்” என ஆவேஷ் கான் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE