‘இதுதாண்டா கிரிக்கெட்’ - பென் ஸ்டோக்ஸ் டிக்ளேர் செய்ததை வியந்த தெலுங்கு சூப்பர் ஸ்டார்!

By ஆர்.முத்துக்குமார்

இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட்டில் புதிய முறையைப் புகுத்தி வருகிறது. மற்ற அணிகளெல்லாம் வெற்றியை கருத்தில் கொண்டு 2வது இன்னிங்ஸை முன்கூட்டியே முடித்துக் கொள்வது வழக்கம் ஆனால் இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் ஆஷஸ் டெஸ்ட் முதல் நாள் ஆட்டத்தில் தன் அணியின் ஸ்கோர் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 393 ரன்கள் என இருந்த போது டிக்ளேர் செய்தது பலவிதமான எதிர்வினைகள் ஏற்பட்டன. தெலுங்கு சினிமா உலக சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு பென் ஸ்டோக்ஸின் இந்த டிக்ளேரை வெகுவாகப் பாராட்டி நெட்டிசன்களை ஆச்சரியப்படுத்தியுள்ளார்.

பலரும் இது என்ன டிக்ளேர்? அதுவும் ஜோ ரூட் நன்றாக அடித்துக் கொண்டிருக்கிறார் 450 அடித்திருக்கலாமே. குறைந்தது 420 ரன்களையாவது வைத்துக் கொண்டு டிக்ளேர் செய்யலாமே என்றெல்லாம் கருதியிருப்பார்கள். இன்று ஆஸ்திரேலியா அணி உஸ்மான் கவாஜாவின் அபாரமான 141 ரன்களுடன் 386 ரன்கள் எடுத்து முதல் இன்னிங்ஸில் ஆல் அவுட் ஆகியுள்ளது. இதனையடுத்து வெறும் 8 ரன்கள்தான் இங்கிலாந்து முதல் இன்னிங்ஸில் முன்னிலை பெற்றுள்ளது. வாய்ப்பு இருந்தும் ஏன் இந்த டிக்ளேர்? பென் ஸ்டோக்ஸ் என்ன பெரிய பிஸ்தாவா என்றெல்லாம் கேள்விகள் எழும் போது தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு விதந்தோதிப் பாராட்டியுள்ளார்.

இங்கிலாந்து இது போன்ற மட்டைப் பிட்சைப் போட்டு ‘பாஸ்பால்’ ஆடுகிறேன் பேர்வழி என்று 550 அடிக்க வேண்டிய பிட்ச்களில் 380 ரன்களை எடுத்து விட்டு அதுவும் டிக்ளேர் செய்து ஆடுவது ஏதோ ஒரு விதத்தில் முட்டாள்தனமோ என்ற சந்தேகங்களை எழுப்பாமல் இல்லை. ஏனெனில், இங்கிலாந்து பவுலிங் என்ன பெரிய 80-களின் வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச்சா? எல்லாம் வயதான பவுலர்கள், ஆலி ராபின்சனெல்லாம் 130 கிமீ வேகத்தைத் தாண்டுவதில்லை. இந்த பலவீனமான பவுலிங்கை வைத்துக் கொண்டு பேட்டிங்கில் 80 ஓவர்களில் 400 அடிப்போம் என்று இறங்கினால் அது பின்னடைவு காணும்போது தோல்விதான் ஏற்படும்.

நடப்பு எட்ஜ்பாஸ்டன் டெஸ்ட்டிலேயே இங்கிலாந்து 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 176 ரன்கள் என்ற நிலையில் ரூட்டையும் வீழ்த்தியிருந்தால் 225 ரன்களுக்கு மடிந்திருந்தால், ஆஸ்திரேலியா இப்போது எடுத்த 386 ரன்கள் எடுத்திருக்கும் நிலையில் இங்கிலாந்து அணி தோல்வியைத் தவிர்க்கப் போராட வேண்டியிருக்கும். ஆகவே இங்கிலாந்து அணி இந்தியா போலவோ, ஆஸ்திரேலியா போலவோ, குறைந்தது நியூசிலாந்து போலவோ வலுவான பந்து வீச்சு இல்லாதவரை இந்த பாஸ்பால் உத்தி பின்னடைவுகளைச் சந்திக்கும் காலம் வெகுதொலைவில் இல்லை.

இந்த டிக்ளேர்கள் இத்தனைக் கேள்விகளை எழுப்புவது ஒரு பக்கம் இருந்தாலும், பெரிய கிரிக்கெட் ரசிகரான மகேஷ் பாபு, ஆஷஸ் தொடரையும் ஆர்வத்துடன் பின் தொடர்வதில் ஆச்சரியமொன்றுமில்லை. ஆனால் பென் ஸ்டோக்ஸின் டிக்ளேரை பாராட்டி, “393 ரன்களுக்கு டிக்ளேர், நான் இதைச் சரியாகத்தான் படிக்கிறேனா... வாவ் இப்போது கிரிக்கெட்டின் புதுயுகத்தை காண்கிறேன்... முதன்மை நுண்ணறிவு என்பது என் மாற்று ஆலோசனை. இது பூர்விகம்/ பிறவி அறிவு/ உடனியல்பாயமைந்துள்ள அறிவு போன்றவற்றை ஒப்பிடும் போது சிறந்தது. நீங்கள் உள்ளியல்பாய் அமைந்த அறிவு என்பதை செயற்கை நுண்ணறிவிற்கு எதிராகப் பயன்படுத்தலாம். Bazball...!” என்று ட்வீட் செய்துள்ளார். இது சமூக ஊடகங்களில் பெரிய அளவில் ‘ஹிட்’ ஆகியுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE