விம்பிள்டன் டென்னிஸ் தொடரின் ஒட்டுமொத்த பரிசுத் தொகை 17 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது. இரு பாலருக்கான ஒற்றையர் பிரிவில் சாம்பியன் பட்டம் வெல்பவருக்கு தலா ரூ.24.60 கோடி பரிசுத் தொகை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டு வழங்கிய பரிசுத் தொகையைவிட 11 சதவீதம் அதிகமாகும்.
இந்த ஆண்டுக்கான தொடரின் மொத்த பரிசுத் தொகை சுமார் ரூ.463 கோடி ஆகும். 2019-ம் ஆண்டு கரோனா தொற்றுக்கு முன்னதாக வழங்கப்பட்ட பரிசுத் தொகையைவிட இது 17.1% அதிகம் என போட்டியை நடத்தும் ஆல் இங்கிலாந்து கிளப் தெரிவித்துள்ளது. முதல் சுற்றுடன் வெளியேறுபவர்கள் சுமார் ரூ.57 லட்சம் பெறுவார்கள். இந்த ஆண்டுக்கான விம்பிள்டன் டென்னிஸ் தொடர் வரும் ஜூலை 3-ம் தேதி தொடங்குகிறது. - ஏஎப்பி