'மேல ஏறி வாரேன்...’ - ஊன்றுகோல் உதவியின்றி படி ஏறும் ரிஷப் பந்த்!

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: இந்திய கிரிக்கெட் அணியின் இளம் வீரரான ரிஷப் பந்த், கடந்த ஆண்டு டிசம்பரில் கார் விபத்தில் சிக்கி காயமடைந்தார். இந்த நிலையில் ஊன்றுகோல் துணையின்றி தான் படியேறி வரும் வீடியோ ஒன்றை பந்த் பகிர்ந்துள்ளார். இதோடு தேசிய கிரிக்கெட் அகாடமியில் அவர் மேற்கொண்டு வரும் பயிற்சி சார்ந்த வீடியோவையும் பகிர்ந்துள்ளார்.

‘நாட் பேட் ரிஷப். எளிய விஷயங்களும் சில நேரங்களில் கடினமாக இருக்கும்’ என ரிஷப் பந்த் அதற்கு கேப்ஷனும் கொடுத்துள்ளார். இதன் மூலம் தனக்கு தானே அவர் ஊக்கம் கொடுத்துக் கொள்கிறார் என புரிந்துகொள்ள முடிகிறது. அவரது வீடியோவுக்கு சக இந்திய கிரிக்கெட் வீரர் அக்சர் படேல், கமெண்ட் செய்துள்ளார்.

2022, டிசம்பர் 30-ம் தேதி டெல்லி - டேராடூன் தேசிய நெடுஞ்சாலையில் ரிஷப் பந்த் காரில் தனியாக பயணித்த போது சாலையின் இடையே இருந்த தடுப்பு கட்டையில் மோதி விபத்தில் சிக்கினார். இந்த விபத்து ரூர்கி அருகே நடந்தது. கார் தீப்பற்றிய நிலையில், அதில் சிக்கி இருந்த அவரை அந்த வழியாக பயணித்தவர்கள் உடனடியாக மீட்டனர். தொடர்ந்து அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்த விபத்தில் அவருக்கு நெற்றியில் இரண்டு இடங்களில் வெட்டுக் காயம் ஏற்பட்டது. வலது முழங்காலில் தசைநார் கிழிந்தது. அவரது வலது மணிக்கட்டு, கணுக்கால், கால் விரலிலும் காயம் ஏற்பட்டது. முதுகில் சிராய்ப்பு காயங்கள் ஏற்பட்டது. மும்பையில் உள்ள கோகிலாபென் திருபாய் அம்பானி மருத்துவமனை மற்றும் மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தில் அவருக்கு முழங்காலில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. தற்போது காயத்தில் இருந்து மீண்டு வருகிறார். அவர் களம் திரும்ப எப்படியும் ஆறு மாத காலம் வரை நேரம் எடுக்கும் என சொல்லப்படுகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE