தனது பயோபிக்கில் வேண்டுமென்றே தன் அண்ணனை தவிர்த்தாரா தோனி?  

By செய்திப்பிரிவு

ராஞ்சி: சிஎஸ்கே கேப்டன் தோனி தன்னுடைய பயோபிக் திரைப்படமான ‘எம்எஸ் தோனி: தி அன்டோல்ட் ஸ்டோரி’ படத்தில் தன் அண்ணனைப் பற்றிய தகவல்கள் இடம்பெறாமல் தவிர்த்து விட்டதாக நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர்.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தற்போதைய கேப்டனுமான தோனியின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு கடந்த 2016ஆம் ஆண்டு வெளியான படம் ‘எம்எஸ் தோனி: தி அன்டோல்ட் ஸ்டோரி’. மறைந்த நடிகர் சுஷாந்த சிங் நடிப்பில் நீரஜ் பாண்டே இயக்கிய இப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் பெரும் வெற்றி பெற்றது. இப்படத்தில் தோனிக்கு ஒரு அக்கா மட்டும் இருப்பதாக காட்டப்பட்டது. ஆனால் நிஜத்தில் தோனிக்கு ஒரு அண்ணனும் இருக்கிறார். தோனியை விட 10 வயது மூத்தவரான அவரது பெயர் நரேந்திர சிங் தோனி.

7 ஆண்டுகளுக்கு முன்பு வெளியான இப்படம் தற்போது சமூக வலைதளங்களில் மீண்டும் பேசுபொருளாகியுள்ளது. காரணம் சில நாட்களுக்கு முன்பு, ஐபிஎல் இறுதிப் போட்டியில் சிஎஸ்கே வெற்றி பெற்ற சமயத்தில் நெட்டிசன்கள் சிலர் தோனியின் அண்ணனின் இன்ஸ்டாகிராம் பக்கத்தை கண்டுபிடித்து, அவரது புகைப்படங்களையும் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வந்தனர். இந்த நிலையில், ரசிகர்கள் சிலர், தோனியின் அண்ணன் குறித்து ‘எம்எஸ் தோனி: தி அன்டோல்ட் ஸ்டோரி’ படத்தில் எதுவும் காட்டப்படவில்லை என்று நெட்டிசன்கள் பலரும் விமர்சித்து வருகின்றனர். வேண்டுமென்றே தோனி தனது அண்ணனை தவிர்த்து விட்டதாகவும் குற்றம்சாட்டினர்.

சில ஆண்டுகளுக்கு முன்பு ஒரு தனியார் ஊடகத்துக்கு அளித்த பேட்டியில் இந்த கேள்விக்கு நரேந்திர சிங் தோனி பதிலளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: “மஹியின் குழந்தைப் பருவத்திலோ, அவன் இளைஞனாகப் போராடிய காலத்திலோ, உலகத்துக்கே எம்எஸ்டி ஆக மாறிய பின்னரோ, மஹியின் வாழ்க்கையில் எனக்குப் பெரியளவில் பங்களிப்புகள் இல்லை. இதன் காரணமாக கூட நான் படத்தில் இல்லாமல் இருக்கலாம். ஆனால் இந்த படம் மஹியைப் பற்றியது. அவனுடைய குடும்பத்தை பற்றியது அல்ல” என்று கூறியிருக்கிறார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE