ஆஷஸ் தொடர் | ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து அணி அறிவிப்பு

By செய்திப்பிரிவு

லண்டன்: ஆஷஸ் தொடருக்கான இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. 5 போட்டிகள் கொண்ட இந்த தொடரில், தற்போது முதல் இரண்டு போட்டிகளுக்கான இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் 16-ம் தேதி இந்த தொடர் துவங்க உள்ளது. உலக அளவில் கிரிக்கெட் ரசிகர்கள் ஆஷஸ் டெஸ்ட் தொடரை ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர்.

ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இந்த தொடர் வரும் ஜூலை 31-ம் தேதி அன்று நிறைவடைகிறது. இங்கிலாந்து அணிக்கு பென் ஸ்டோக்ஸ் கேப்டனாக பொறுப்பேற்றுக் கொண்ட நாளில் இருந்து புதிய பாய்ச்சலுடன் அந்த அணி விளையாடி வருகிறது. ஸ்டோக்ஸ் தலைமையில் அதிரடி யுக்திகள் மூலம் இங்கிலாந்து அணி டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆதிக்கம் செலுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

கடந்த 1-ம் தேதி அயர்லாந்து அணிக்கு எதிராக இங்கிலாந்து ஒரே ஒரு போட்டி கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் விளையாடியது. இந்தப் போட்டி 3 நாட்களில் முடிவுக்கு வந்துள்ளது. இங்கிலாந்து அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. இந்த போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார் அறிமுக வீரர் ஜோஷ் டங்க்.

ஆஷஸ் தொடரின் முதல் இரண்டு போட்டிகளுக்கான இங்கிலாந்து வீரர்கள்: பென் ஸ்டோக்ஸ் (கேப்டன்), ஜேம்ஸ் ஆண்டர்சன், ஜானி பேர்ஸ்டோவ், ஸ்டூவர்ட் பிராட், ஹாரி புரூக், ஜாக் கிராலி, பென் டக்கெட், டான் லாரன்ஸ், ஜாக் லீச், ஆலி போப், மேத்யூ பாட்ஸ், ஆலி ராபின்சன், ஜோ ரூட், ஜோஷ் டங்க், கிறிஸ் வோக்ஸ், மார்க் வுட்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE