சச்சினுடன் சுப்மனை ஒப்பிடுவது நியாயமில்லை: இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் கேரி கிறிஸ்டன்

By செய்திப்பிரிவு

மும்பை: இந்திய கிரிக்கெட் வீரர் சுப்மன் கில் அபார திறமை கொண்ட இளம் வீரர் என்றும், அவரை சச்சின் டெண்டுல்கருடன் ஒப்பிடுவதில் நியாயமில்லை என்றும் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் பயிற்சியாளர் கேரி கிறிஸ்டன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் அளித்த பேட்டி ஒன்றில், “சுப்மன் கில் அபாரமான திறமை கொண்ட ஓர் இளம் வீரர். உலகின் மிகச் சிறந்த வீரர்களில் ஒருவராக இருக்க வேண்டும் என்ற வேட்கை கொண்டவர். அவரது பயணத்தின் ஆரம்பத்திலேயே அவரை சச்சின் மற்றும் விராட் கோலி ஆகியோருடன் ஒப்பிடுவது நியாயமற்றது.

இந்தியாவுக்காக மூன்று வடிவங்களிலும் வெற்றிகரமாக ஆடும் திறன் அவரிடம் இருப்பதாக நான் நம்புகிறேன். இந்த காலகட்டத்தில், குறிப்பாக டி20 கிரிக்கெட் மிகவும் வேகமாக முன்னேறி வரும்போது, அத்தகைய திறனை நீங்கள் பெரும்பாலும் பார்க்க முடியாது. இந்த ஐபிஎல் சீசனில் அவர் தனது பலத்தையும், அவற்றை ஒவ்வொரு போட்டியிலும் சரியான நேரத்தில் எவ்வாறு பயன்படுத்துவது என்பதையும் பற்றிய அற்புதமான புரிதலை வெளிப்படுத்தினார்.

உலகின் சிறந்த பவுலிங்கை கூட சமாளிக்கும் நுட்பத்தை அவர் பெற்றுள்ளார். மேலும், தேவைப்படும் நேரத்தில் அவரால் விரைவாக ஸ்கோர் செய்யவும் முடியும். அனைத்து வடிவங்களிலும், இந்திய அணியின் சிறந்த வீரராக மாறுவதற்கான அனைத்து தகுதிகளும் சுப்மனிடம் உள்ளது. எந்தவொரு வீரரைப் போலவே அவரும் சவால்களையும் தடைகளையும் சந்திக்க நேரிடும். அவற்றை அவர் எவ்வாறு கையாண்டு, தொடர்ந்து முன்னேறுகிறார் என்பதே இறுதியில் அவரது நீண்ட கால வெற்றியை தீர்மானிக்கும். தொடர்ந்து கற்றுக்கொள்வதற்கு நான் அவரை ஊக்குவிப்பேன்” என்று கேரி கிறிஸ்டன் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE