'அதுதான் தோனி' - கோப்பையை தானும், ஜடேஜாவும் பெற்றுக் கொண்டது குறித்து ராயுடு

By செய்திப்பிரிவு

அண்மையில் நிறைவடைந்த ஐபிஎல் 2023 சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பட்டம் வென்றது. வெற்றிக் கோப்பையை அணியின் கேப்டன் தோனி மட்டுமல்லது சீனியர் வீரர்களான ராயுடுவும், ஜடேஜாவும் உடன் சென்று பெற்றுக் கொண்டனர். அது குறித்து ராயுடு தெரிவித்தது.

“இறுதிப் போட்டியில் வென்ற பின்னர் வெற்றி கொண்டாட்டத்தில் மூழ்கி இருந்த என்னையும், ஜடேஜாவையும் தோனி அழைத்து பேசினார். கோப்பையை பெற்றுக் கொள்ளும் போது அவருடன் நானும், ஜடேஜாவும் இருக்க வேண்டும் என விரும்புவதாகத் தெரிவித்தார். அதை செய்வதற்கு அதுதான் சரியான தருணம் என்றும் அவர் நினைத்துள்ளார். அது அவருக்கும் ரொம்பவே ஸ்பெஷலான தருணம். ஆனால், அவர் அப்படிச் செய்வார் என நான் எதிர்பார்க்கவில்லை. அதுதான் தோனி. அது அவரது இயல்பு” என ராயுடு தெரிவித்துள்ளார்.

ராயுடு, ஐபிஎல் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார். 37 வயதான ராயுடு இந்திய அணிக்காக 55 ஒருநாள் போட்டிகள் மற்றும் 6 டி20 போட்டிகளில் விளையாடியவர். கடைசியாக கடந்த 2019-ல் இந்திய அணிக்காக விளையாடி இருந்தார்.

ஐபிஎல் கிரிக்கெட்டை பொறுத்தவரை மொத்தம் 203 போட்டிகளில் விளையாடி உள்ளார். 4,329 ரன்கள் குவித்துள்ளார். மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக ஐபிஎல் கிரிக்கெட்டில் பேட் செய்துள்ளார். கடந்த 2018 முதல் சென்னை அணிக்காக விளையாடினார். சிஎஸ்கே அணிக்காக 89 ஐபிஎல் போட்டிகளில் 1,913 ரன்கள் குவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE