வைகாசி விசாகத் திருவிழா | பழநியில் கொடியேற்றத்துடன் தொடக்கம்: ஜூன் 2-ல் தேரோட்டம்

By ஆ.நல்லசிவன்

பழநி: பழநியில் வைகாசி விசாகத் திருவிழா சனிக்கிழமை (மே 27) காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் ஜூன் 2-ம் தேதி நடைபெறுகிறது.

திண்டுக்கல் மாவட்டம் பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலின் உப கோயிலான பெரியநாயகியம்மன் கோயிலில் வைகாசி விசாகத் திருவிழாவை முன்னிட்டு சேவல், மயில், வேல் படங்கள் பொறிக்கப்பட்ட கொடிக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டு சனிக்கிழமை காலை 11.30 மணிக்கு மேல் கொடியேற்றம் நடைபெற்றது. முத்துக்குமாரசுவாமி, வள்ளி, தெய்வானைக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது.

விழாவையொட்டி, மலைக்கோயில் மற்றும் திருஆவினன்குடி கோயிலில் உச்சிக்காலத்தில் காப்பு கட்டுதல் நடந்தது. கொடியேற்ற நிகழ்ச்சியில் கோயில் இணை ஆணையர் நடராஜன், துணை ஆணையர் பிரகாஷ், அறங்காவலர் குழு உறுப்பினர்கள் மணிமாறன், சுப்பிரமணியன், கந்தவிலாஸ் உரிமையாளர் செல்வகுமார் உட்பட பலர் பங்கேற்றனர்.

பழநியில் வைகாசி விசாகத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

திருவிழாவின் 10 நாட்களும் பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதியுலா நடைபெறுகிறது. ஆறாம் நாளான ஜூன் 1-ம் தேதி இரவு 7.15 மணிக்கு மேல் திருக்கல்யாணமும், விழாவின் முக்கிய நிகழ்வான ஜூன் 2-ம் தேதி மாலை 4.30 மணிக்கு மேல் தேரோட்டம் நடைபெற உள்ளது. ஜூன் 5-ம் தேதி காலையில் திருவூடல் நிகழ்ச்சி, இரவில் கொடியிறக்குதலுடன் விழா நிறைவடைகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE