பழநியில் போகர் ஜெயந்தி விழா கோலாகலம்

By ஆ.நல்லசிவன்

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் பழநியில் போகர் ஜெயந்தி விழா கோலாகலமாக நடைபெற்றது. பழநி தண்டாயுதபாணி சுவாமி மலைக்கோயிலில் உள்ள மூலவர் சிலை போகர் சித்தரால் நவபாஷாணத்தால் உருவாக்கப்பட்டது. போகர் சித்தர் வைகாசி மாதம் பரணி நட்சத்திரத்தில் அவதரித்தார். இன்று அவரது ஜெயந்தி விழாவையொட்டி, பழநி மலைக்கோயிலில் உள்ள போகர் சந்நிதியில் அவர் வணங்கிய புவனேஸ்வரி அம்மன், மரகத லிங்கத்திற்கு 16 வகை சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றது.

இதில் சிவானந்த புலிப்பாணி பாத்திர சுவாமிகள், இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம், இந்து தமிழர் கட்சி நிறுவனத் தலைவர் ராம.ரவிக்குமார், வெளிநாட்டினர் மற்றும் உள்ளூர் மக்கள் திரளாக கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். போகர் ஜெயந்தியையொட்டி, புலிப்பாணி ஆசிரமத்தில் அன்னதானம் வழங்கப்பட்டது.

இதேபோல் பழநி அருகேயுள்ள ஆயக்குடி அடுத்துள்ள பொன்னிமலை அடிவாரத்தில் உள்ள போகர் சித்தர் கோயிலில், போகர் ஜெயந்தியை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது. ஏராளமான பெண்கள் பொங்கல் வைத்து வழிப்பட்டனர். பக்தர்களுக்கு அன்னதானம் நடைபெற்றது.

இதைத்தொடர்ந்து, கோயில் அறங்காவலர் குழு கூட்டம் தலைவர் அறிவழகன் தலைமையில் நடந்தது. துணைத் தலைவர் பழனிவேல், செயலாளர் கிருஷ்ணன், பொருளாளர் குணசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் பொன்னிமலை பகுதியில் விதைப்பந்து மூலம் ஒரு கோடி மரக்கன்று நடவு செய்வது என முடிவு செய்யப்பட்டது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE