வேளாங்கண்ணி பேராலயத்தில் புனித வெள்ளி ஆராதனை: பல்லாயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் பங்கேற்பு

By செய்திப்பிரிவு

நாகப்பட்டினம்: வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலயத்தில் புனித வெள்ளி ஆராதனை நேற்று நடைபெற்றது.

இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு உயிர்நீத்த நாளை புனித வெள்ளியாக கிறிஸ்தவர்கள் அனுசரித்து வருகின்றனர். அதற்கு முந்தைய 40 நாட்கள் தவக்காலமாகக் கடைப்பிடிக்கப்படுகிறது. அந்த வகையில், நடப்பாண்டு பிப். 22-ம் தேதி சாம்பல் புதனுடன் தவக்காலம் தொடங்கியது. ஏப். 2-ம் தேதி குருத்தோலை பவனி நடைபெற்றது. நேற்று முன்தினம் பெரிய வியாழனை முன்னிட்டு பாதம் கழுவும் நிகழ்ச்சி நடைபெற்றது. நேற்று புனித வெள்ளி சிறப்பு ஆராதனை, திருப்பலி நடைபெற்றது.

இதையொட்டி, நாகை மாவட்டம் வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலயத்தில் உள்ள கலையரங்கில் நேற்று இரவு புனித வெள்ளியை முன்னிட்டு பேராலய அதிபர் இருதயராஜ் அடிகளார் தலைமையில் சிறப்பு ஆராதனை மற்றும் திருப்பலி நடைபெற்றது.

பின்னர், சிலுவையில் அறையப்பட்ட இயேசுவின் சொரூபத்தை சிலுவைப் பாதை ஊர்வலமாகக் கொண்டு சென்றனர். அப்போது, இயேசுவின் சிலுவைப்பாடுகளை நினைவுகூர்ந்து, கண்ணீர் விட்டபடி அவரது பாதத்தை தொட்டு வணங்கினர். இதில், பல்லாயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர். இதையொட்டி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கு.ஜவஹர் தலைமையில் ஏராளமான போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

இயேசு உயிர்த் தெழுந்த நாளான ஈஸ்டர் பண்டிகை நாளை (ஏப்.9) நடைபெற உள்ளது. நாகை மாவட்டம் வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலயத்தில் நேற்று நடைபெற்ற புனித வெள்ளி ஆராதனையில் பங்கேற்றோர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE