பங்குனி உத்திர திருவிழா: பழநி முருகன் கோயிலில் இன்று மாலை தேரோட்டம்

By ஆ.நல்லசிவன்

பழநி: பழநி பங்குனி உத்திர திருவிழாவின் 6-ம் நாளான நேற்று திருக்கல்யாண உற்சவம் கோலாகலமாக நடைபெற்றது. முக்கிய விழாவான பங்குனி உத்திர தேரோட்டம் இன்று (ஏப்.4) மாலை நடைபெறுகிறது.

திண்டுக்கல் மாவட்டம் பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலின் உப கோயிலான திருஆவினன்குடி கோயிலில் பங்குனி உத்திர திருவிழா மார்ச் 29-ல் கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதை முன்னிட்டு பல்வேறு மாவட்டங்ளில் இருந்தும் பக்தர்கள் பழநிக்கு வந்து கொண்டிருக்கின்றனர்.

இதையொட்டி தினமும் வள்ளி, தெய்வானை சமேத முத்துக்குமார சுவாமி வெள்ளி காமதேனு, யானை, தந்த பல்லக்கு உள்ளிட்ட வாகனங்களில் சந்நிதி வீதி, கிரிவீதியில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தனர். விழாவின் 6-ம் நாளான நேற்று மாலை 6.30 மணி அளவில் திருக் கல்யாண உற்சவம் கோலாகலமாக நடைபெற்றது.

முன்னதாக வள்ளி, தெய்வானையுடன் எழுந்தருளிய முத்துக்குமார சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடைபெற்றது. தொடர்ந்து, இரவு 8.30 மணிக்கு மேல் மணக்கோலத்தில் வள்ளி, தெய்வானையுடன் முத்துக்குமார சுவாமி வெள்ளித் தேரில் எழுந்தருளினார். இந்நிகழ்வில் கோயில் இணை ஆணையர் நடராஜன், துணை ஆணையர் பிரகாஷ், அறங்காவலர் குழு உறுப்பினர்கள் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

விழாவின் முக்கிய நிகழ்வான பங்குனி உத்திர தேரோட்டம் இன்று (ஏப்.4) மாலை 4.30 மணிக்கு மேல் நடைபெறுகிறது. இதையொட்டி, ஆயிரக்கணக்கான பக்தர்கள் பழநியில் குவிந்துள்ளதால், மதுரை, திண்டுக்கல் மற்றும் தேனி மாவட்டங்களை சேர்ந்த 1,500-க்கும் மேற்பட் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE