மாசிமக கடல் தீர்த்தவாரி: நூற்றுக்கணக்கான கோயில் உற்வச மூர்த்திகளை புதுச்சேரியில் தரிசித்த பக்தர்கள்

By செ. ஞானபிரகாஷ்

புதுச்சேரி: மாசிமக கடல் தீர்த்தவாரியொட்டி புதுச்சேரி, தமிழகத்தில் பிரசித்தி பெற்ற நூற்றுக்கணக்கான கோயில் உற்சவ மூர்த்திகளை ஒரே இடத்தில் பக்தர்கள் தரிசித்தனர். ஏராளமான பக்தர்கள் கடலில் நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் தந்தனர். வழியெங்கும் அன்னதானம், மோர் பக்தர்களுக்கு பலரும் விநியோகித்தனர்.

மாசி மாதத்தில் நாம் செய்யும் எந்த காரியமும் இரட்டிப்பு பலன்கள் தரும் என்பது ஐதீகம். அந்த வகையில் மாசிமகத்தையொட்டி புதுச்சேரி, காரைக்கால் மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தீர்த்தவாரி நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. புதுவை வைத்திக்குப்பத்தில் மாசிமக கடல்தீர்த்தவாரி நடந்தது. தீர்த்தவாரியை முன்னிட்டு புதுவை மற்றும் தமிழக பகுதிகளில் இருந்து பிரசித்தி பெற்ற கோயில்களில் இருந்து உற்சவ மூர்த்திகள் பங்கேற்றன.

தமிழகத்தைச் சேர்ந்த மேல்மலையனுார் அங்காளம்மன், செஞ்சி ரங்கநாதர், திண்டிவனம் நல்லியக்கோடான் நகர் சீனிவாசபெருமாள், தீவனுார் பொய்யாமொழி விநாயகர், மயிலம் முருகன், சிங்கிரி நரசிம்மர் உட்பட கோவில்களின் உற்சவ மூர்த்திகளும், புதுவையைச் சேர்ந்த மணக்குள விநாயகர், வேதபுரீஸ்வரர், வரதராஜ பெருமாள், தென்கலை சீனிவாச பெருமாள், ஹயக்கிரீவர், கவுசிகபாலசுப் பிரமணியர், முல்லைநகர் உலகநாயகி அம்மன் உட்பட 100-க்கும் மேற்பட்ட உற்சவ மூர்த்திகள் தீர்த்தவாரியில் பங்கேற்றன.

ஒரே இடத்தில் அனைத்து சுவாமிகளையும் தரிசிக்க புதுவை நகர், புறநகர் பகுதியிலிருந்து ஆயிரக்கணக்கில் மக்கள் வைத்திக்குப்பத்தில் திரண்டனர். உற்சவர்கள் முழு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். கோடைவெயிலின் தாக்கம் அதிகரித்த சூழலிலும் ஏராளமான உற்சவர்களை வணங்கி, பலரும் கடலில் நீராடி முன்னோருக்கு தர்ப்பணம் தந்தனர். கடலின் ஆழமான பகுதிக்கு சென்று விடாதவாறு போலீஸார் ஒலிபெருக்கி மூலம் எச்சரிக்கை செய்தபடி இருந்தனர்.

கூட்டத்தில் பக்தர்களிடம் திருட்டு கும்பல் கைவரிசை காட்டுவதை தவிர்க்க, போலீஸார் கண்காணிப்பு கோபுரங்கள் அமைத்து அங்கிருந்து பைனாகுலர் மற்றும் டிரோன் கேமரா மூலமாகவும் மூலமும் கூட்டத்தினரை கண்காணித்தனர். சுவாமியை தரிசிக்க வந்த பக்தர்களுக்கு நகரின் பல்வேறு பகுதிகளில் வழியெங்கும் அன்னதானம், நீர்மோர், குடிநீர் ஆகியவற்றை வழங்கினர். தீர்த்தவாரியை முன்னிட்டு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டிருந்தது. நுாற்றுக்கணக்கான போலீஸார் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளில் ஈடுபட்டிருந்தனர். வழக்கத்தை விட இம்முறை மக்கள் அதிகளவில் திரண்டதால் கடும் நெரிசலும் வைத்திக்குப்பம் முழுக்க ஏற்பட்டது. | சிறப்பு ஆல்பம் > மாசி மகம்: புதுவை வைத்திக்குப்பம் கடற்கரையில் தீர்த்தவாரி - புகைப்படத் தொகுப்பு

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE