கும்பகோணம்: கும்பகோணம் மாசி மகத்தையொட்டி கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் கோயிலில் 4 திருத்தேரோட்டம் இன்று நடைபெற்றது.
கும்பகோணத்தில் நடைபெறும் மகாமக விழாவிற்கு சிறப்புப் பெற்ற 12 சிவன் கோயில்கள் மற்றும் 5 பெருமாள் கோயில்களில் 12 ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறுவது மாசி மகாமகம். இதனையொட்டி 6 சிவன் கோயில்களில் கடந்த 25-ம் தேதி கொடியேற்றமும், 3 பெருமாள் கோயில்களில் கடந்த 26-ம் தேதி கொடியேற்றமும் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து பல்வேறு வாகனங்களில் சுவாமிகள் வீதியுலா நடைபெற்று வருகிறது.
முக்கிய விழாவான இன்று அதிகாலை 5.30 மணி முதல் 6 மணிக்குள் விநாயகர், முருகன் திருத்தேரோட்டமும், 11 மணிக்கு மேல் ஆதிகும்பேல்வரர் மங்களாம்பிகைய்யமன் என மொத்தம் 4 திருத்தேரோட்டம் நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்று, 'கும்பேஸ்வரா.. கும்பேஸ்வரா' எனத் தேரின் வடம் பிடித்து இழுத்துச் சென்றனர். தேரில் தனித்தனியாக ஆதிகும்பேஸ்வரர், மங்களாம்பிகையம்மன், விநாயகர், முருகன் சுவாமிகள் சிறப்பலங்காரத்தில் பக்தர்களுக்குக் காட்சியளித்தனர்.
தேரோட்ட நிகழ்ச்சியில் எம்எல்ஏ சாக்கோட்டை க.அன்பழகன், அறநிலையத்துறை - மயிலாடுதுறை இணை ஆணையர் சு.மோகனசுந்தரம், மாநகர துணை மேயர் சு.ப.தமிழழகன், செயல் அலுவலர் கோ.கிருஷ்ணகுமார் மற்றும் ஏராளமானோர் பங்கேற்றனர். இந்நிலையில், இந்த தேர் ஆதிகும்பேஸ்வரர் கோயில் கீழவீதியிலிருந்து புறப்பட்டு, தெற்கு வீதிக்குத் திரும்பும் போது, எதிர்பாராத விதமாக அங்கிருந்து முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் சிலையிலிருந்த விரல், தேரின் குதிரை கால்பட்டு உடைந்தது. இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
இத்தேரோட்டத்தின் போது அசம்பாவிதங்கள் ஏற்படாத வகையில் டிஎஸ்பி (பொறுப்பு) ஜாபர்சித்திக் தலைமையில் போலீஸார் மற்றும் ஊர்காவல் படையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
இன்று மாலை 5 மணிக்கு ஆதிகும்பேஸ்வரர் கோயில் சண்டிகேஸ்வரர் தேரோட்டமும், அதனைத் தொடர்ந்து காசிவிஸ்வநாதர், கவுதமேஸ்வரர், அபிமுகேஸ்வரர் ஆகிய 3 கோயிலின் தேரோட்டம் மாலையில் மகாமக குளத்தைச் சுற்றிலும், காலஹஸ்தீஸ்வரர் கோயிலில் காலை 9 மணிக்கும், சோமேஸ்வரர் கோயிலில் மாலை 6 மணிக்கு மேல் தேரோட்டம் நடைபெறுகிறது. தொடர்ந்து நாளை மறுநாள் (6-ம் தேதி) மாசி மக தீர்த்தவாரி மகா மககுளத்தில் நடைபெறுகிறது.
இதே போல் நாகேஸ்வரர், கம்பட்டவிஸ்வநாதர், ஏகாம்பரேஸ்வரர், கோடிஸ்வரர், அமிர்தகலசநாதர், பாணபுரீஸ்வரர் ஆகிய 6 சிவன் கோயில்களில் ஏக தின உற்சவமான நாளை மாசி மகத்தை யொட்டி மகாமக குளத்தில் நடைபெறும் தீர்த்தவாரிக்கு எழுந்தருளுகின்றனர். இதே போல் சக்கரபாணி, ராஜகோபாலசுவாமி, ஆதிவராகப்பெருமாள் ஆகிய 3 பெருமாள் கோயில்களில் நாளை மறுநாள் காலை 9 மணிக்கு மேல் திருத்தேரோட்டம் நடைபெறுகிறது.