கனமழை எச்சரிக்கை: பிப். 3, 4-ல் சதுரகிரி செல்ல பக்தர்களுக்கு தடை

By அ.கோபால கிருஷ்ணன்

ஸ்ரீவில்லிபுத்தூர்: மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலுக்கு செல்வதற்கு பிப்ரவரி 3 மற்றும் 4-ம் தேதிகளில் பக்தர்கள் மலையேறி சாமி தரிசனம் செய்ய வனத்துறை தடை விதித்துள்ளது.

ஸ்ரீவில்லிபுத்தூர் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் வழிபாடு நடத்துவதற்கு பிரதோஷம், பவுர்ணமி, அமாவாசை ஆகிய நாட்களில் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படும். அதன்படி தை மாத பவுர்ணமி வழிபாட்டிற்காக பிப்.3-ம் தேதி முதல் 4 நாட்கள் அனுமதி அளிக்கப்பட்டது.

இந்நிலையில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டதை அடுத்து பிப்.3, 4 ஆகிய இரு நாட்கள் பக்தர்கள் சதுரகிரி மலையேறி சாமி தரிசனம் செய்ய வனத்துறை தடை விதித்துள்ளது. மழையை பொறுத்து 5 மற்றும் 6-ம் தேதிகளில் அனுமதி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE