மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் தை அமாவாசை சிறப்பு வேள்வி பூஜை

By செய்திப்பிரிவு

மேல்மருவத்தூர்: மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் தை அமாவாசை சிறப்பு வேள்வி பூஜை நேற்று நடந்தது.

மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் தை அமாவாசை தினமான நேற்று காலை மங்கல இசையுடன் நிகழ்ச்சி தொடங்கியது. காலை 3 மணி அளவில் ஆதிபராசக்தி அம்மனுக்கு அபிஷேகம் செய்து வெள்ளி காப்பு அணிவிக்கப்பட்டு மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தார். இந்த நிகழ்ச்சியையொட்டி சித்தர் பீட வளாகம் முழுவதும் வாழை, தோரணங்கள், மலர்கள், வண்ண விளக்குகள் ஆகியவற்றால் அலங்கரிக்கப் பட்டிருந்தது.

இந்த நிகழ்ச்சியில் காலை 10.45 மணி அளவில்சித்தர் பீடம் வந்த பங்காரு அடிகளாருக்கு திருச்சி மாவட்ட ஆதிபராசக்தி ஆன்மீக இயக்க பொறுப்பாளர்கள் பாத பூஜை செய்து வரவேற்பு அளித்தனர்.

இதனைத் தொடர்ந்து கருவறையில் ஆதிபராசக்தி அம்மனுக்கு பங்காரு அடிகளார் தீபாராதனை காட்டி சித்தர் பீடத்தை வலம் வந்து ‘ஓம்’ மேடை முன்பாக தை அமாவாசையை ஒட்டி அமைக்கப்பட்டிருந்த பொது வேள்வி யாக குண்டத்தில் தீபாராதனை காட்டி கற்பூரம் போட்டு வேள்வி பூஜையை தொடங்கி வைத்தார்.

இதில் கலந்துகொண்ட பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து மாலை 3 மணி அளவில் சித்தர் பீட வளாகத்தில் தங்க ரத பவனி நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். மேலும் இந்தசித்தர் பீடத்தில் தைப்பூச சக்தி மாலை இருமுடி விழா நடைபெற்று வருகிறது. தை அமாவாசை தினமான நேற்று 1 லட்சம் பக்தர்கள் இருமுடி செலுத்தி அம்மனை வழிபட்டனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE