பகவான் ஸ்ரீ ரமண மகரிஷியின் 143-ம் ஆண்டு ஜயந்தி மஹோத்ஸவம்

By இரா.தினேஷ் குமார்

திருவண்ணாமலை: பகவான் ஸ்ரீ ரமண மகரிஷியின் 143-ம் ஆண்டு ஜயந்தி மஹோத்ஸவம் திருவண்ணாமலை கிரிவல பாதையில் உள்ள ஸ்ரீ ரமணாசரமத்தில் இன்று (7-ம் தேதி) நடைபெற்றது.

மதுரையை அடுத்த திருச்சுழியில் 30-12-1879-ம் ஆண்டு அவதரித்தவர் பகவான் ஸ்ரீ ரமண மகரிஷி. இவர், “ஞான தபோதனரை வாவென்றழைக்கும்” திருவண்ணாமலையில் உள்ள அண்ணாமலையாரை தரிசித்து ஞானம் பெற்று, சித்தி பெற்றார்.

இவர் அவதரித்த, மார்கழி மாத பூனர்பூச நட்சத்திரத்தன்று, திருவண்ணாமலை கிரிவல பாதையில் உள்ள ஸ்ரீ ரமணாசரமத்தில் ஜயந்தி விழா, ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும். அதன்படி, 143-ம் ஆண்டு ஜயந்தி மஹோத்ஸவம் இன்று (7-ம் தேதி) நடைபெற்றது. இதையொட்டி ருத்ராபிஷேகம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டன.

முன்னதாக, ஜயந்தி தின பாராயணம் நடைபெற்றது. பகவான் ரமணரின் பக்தி பாடல்கள் மற்றும் கீர்த்தனைகளை பாடி பக்தர்கள் வழிபட்டனர். ஸ்ரீ ரமணாசிரமம் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டன. ஜயந்தி விழாவில் ஸ்ரீ ரமணாசிரமம் தலைவர் வெங்கட் எஸ்.ரமணன், செயலாளர் சிவதாஸ் கிருஷ்ணன் மற்றும் பக்தர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டன.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE