திருச்செந்தூரில் கந்த சஷ்டி விழா அக். 25-ல் தொடக்கம் - அக்.30-ம் தேதி சூரசம்ஹாரம், 31-ம் தேதி திருக்கல்யாண உற்சவம்

By செய்திப்பிரிவு

தூத்துக்குடி: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி திருவிழா அக்டோபர் 25-ம் தேதி தொடங்குகிறது. 30-ம் தேதி சூரசம்ஹாரம் நடைபெறுகிறது.

இதுகுறித்து கோயில் இணை ஆணையர் ம.அன்புமணி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி திருவிழா அக்டோபர் 25-ம் தேதி யாக சாலை பூஜையுடன் தொடங்குகிறது. அன்று அதிகாலை 1 மணிக்கு நடை திறக்கப்பட்டு, 1.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 2 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம், காலை 5.30 மணிக்கு ஸ்ரீ ஜெயந்திநாதர் யாகசாலைக்கு புறப்பாடு ஆகியவற்றை தொடர்ந்து, யாகசாலை பூஜைகள் நடைபெறும். தொடர்ந்து காலை 9 மணிக்கு உச்சிகால பூஜை, பிற்பகல் 3 மணிக்கு சாயரட்சை தீபாராதனை, மற்ற கால பூஜைகள் வழக்கம் போல நடைபெறும். 2-ம் நாள் முதல் 5-ம் நாள் வரை அதிகாலை 3 மணிக்கு நடைதிறக்கப்பட்டு, 3.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 4 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகத்தை தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடைபெறும்.

6-ம் நாளான அக். 30-ம் தேதி அதிகாலை 1 மணிக்கு நடை திறக்கப்பட்டு, 1.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 2 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், காலை 9 மணிக்கு உச்சிகால அபிஷேகம், பிற்பகல் 1 மணிக்கு சாயரட்சை தீபாராதனை, மாலை 4 மணிக்குமேல் கோயில் கடற்கரையில் சூரசம்ஹாரம் நடைபெறும்.

31-ம் தேதி திருக்கல்யாண வைபவத்தையொட்டி அதிகாலை 3 மணிக்கு நடைதிறக்கப்பட்டு, 3.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 4 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகத்தை தொடர்ந்து மற்ற பூஜைகள் நடைபெறும். அதிகாலை 5 மணிக்கு தெய்வானை அம்மன் தபசுக் காட்சிக்கு புறப்பாடு, மாலை 6.30 மணிக்கு சுவாமி - அம்மன் தோள்மாலை
மாற்றும் நிகழ்ச்சி, இரவில் திருக்கல்யாண வைபவம் நடைபெறும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2 ஆண்டுகளாக கரோனா தொற்றால் கந்த சஷ்டி விழா பக்தர்கள் பங்கேற்பின்றி நடைபெற்றது. இந்நிலையில், இந்த ஆண்டு இவ்விழா பக்தர்கள் பங்கேற்புடன் நடைபெற உள்ளதால் திரளானோர் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE