சமணம்: யானையின் கருணை

மகதநாட்டை அரசன் சிரேனிகராஜன் ஆண்டு வந்தான். அவன் மனைவி தாரணி. அவர் களுக்கு மேககுமாரன் எனும் மகன் இருந்தான். மேககுமாரன் வாலிப பருவம் அடைந்ததும் எட்டு அழகியப் பெண்களை திருமணம் செய்து வாழ்ந்து வந்தான்.

அச்சமயத்தில் ராஜகிரகம் எனும் நகருக்கு பகவான் மகாவீரர் எழுந்தருளினார். அந்நகர மக்கள் அவரைச் சென்று தரிசித்தனர். மேககுமாரன் பகவானின் அறவுரைகளால் ஈர்க்கப்பட்டு, தன் பெற்றோரிடம் தான் துறவறம் மேற்கொள்ளப் போவதாகத் தெரிவித்தான். அதுகேட்ட பெற்றோர் எண்ணத்தைக் கைவிடக் கோரினர். ஆயினும் பலன் இல்லை. எனவே ஒரு நாள் மட்டும் மன்னனாக முடிசூட்டிக்கொள்ள வேண்டினர். அதற்கு மேககுமாரன் சம்மதிக்க முடிசூட்டு விழா கோலாகலமாக நடந்தது. அடுத்த நாளே மேககுமாரன் துறவை ஏற்றான். வர்த்தமானரின் சீடராகி அவருடனே சென்றுவிட்டான்.

மேககுமாரனுக்கு இரவு குகையின் வாயிற்படியின் அருகிலேயே படுக்கை.அங்கே மேககுமாரன் படுத்துக்கொண்டான். அங்கு தங்கியிருந்த துறவிகள் இரவில் சிறுநீர் கழிக்க அவ்வப்போது வெளியில் சென்றனர். சென்றவர்கள் தெரியாமல் மேககுமாரன் படுக்கையையும் அவனையும் மிதித்துக்கொண்டு சென்றனர். இரவு முழுவதும் அவன் தூங்கவில்லை. இந்தக் கடுமையான வாழ்க்கையைத் தன்னால் வாழமுடியாது என்று நினைத்துத் துறவறத்தைத் துறக்க எண்ணினான்.

பொழுது புலர்ந்ததும் மேககுமாரன், மகாவீரரிடம் மீண்டும் அரண்மனைக்குச் செல்ல அனுமதி வேண்டினான். அவனின் அசவுகரியத்தை அறிந்த பகவான், “மேகா,சென்ற பிறவியில் எவ்வளவோ அசவுகரியங்களை நீ சந்தித்தாய் தெரியுமா? நீ சென்ற பிறவியில் மேருபிரபா எனும் யானைத் தலைவனாக இருந்தாய். அப்பொழுது மிகப்பெரிய தீ விபத்து ஏற்பட்டது. அதிலிருந்து நீ தப்பித்து, அனைத்து மிருக உயிரினங்களும் தங்க புகலிடம் தந்தாய். அப்போது ஒரு முயல் உன் காலடியில் மிதிபட்டுவிடக் கூடாதென்பதற்காக, ஒரு காலைத் தூக்கி நீண்டநேரம் நின்றதால், சதைப்பிடித்து வலியால் துடித்து இறந்தாய். சிரேனிகனின் இளவரசனாக இந்தப் பிறவியில் பிறந்தாய். நீ முயலுக்குக் காட்டிய கருணையே உயர்ந்த பிறவிக்குக் காரணமாகும். அதுபோல நீ உன் சக முனிவர்களால் ஏற்பட்ட அசுத்தத்தைப் பொறுத்துக் கொண்டால் உனக்கு நிலையான சுகம் கிடைக்கும்.” என்றார்.

பகவானின் சொல்கேட்டு மேகமுனி மனம் மாறி துறவறத்தில் தீவிரம் காட்டி, இறுதியில் சல்லேக்கனை விரதமேற்று முக்தி அடைந்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE