ஒவ்வொரு மதத்திலும் மந்திரங்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. சமண மதத்திலும் மந்திரங்கள் போற்றப்படுகின்றன.அவற்றில் தலையாயது பஞ்சமந்திரம் ஆகும்.இதனை சமணர்கள் குழந்தைகள் முதல் அனைவரும் அறிந்துள்ளனர்.
நமோ அரிஹந்தாணம்
நமோ ஸித்தாணம்
நமோ ஆஇரியாணம்
நமோ உவஜ்ஜாயாணம்
நமோ லோயே ஸவ்வஸாஹூணம்,
என்பதுதான் அம்மந்திரம்.இதனை ணமோகார மந்திரம்,பஞ்சமந்திரம்,மூல மந்திரம்,அனாதி மந்திரம்,நமஸ்கார மந்திரம் என்றெல்லாம் அழைப்பர். பிராகிருத மொழியில் உள்ள இது யாரால் எப்பொழுது ஆக்கப்பட்டது என்றுத் தெரியவில்லை.”ஷட்கண்டாகமம்” எனும் நூல்தான் முதன்முதலில் வரிவடிவம் பெற்றதாகும்.அதில் இந்த பஞ்ச மந்திரம் கடவுள் வாழ்த்தாக அமைந்துள்ளது
அருகதையோருக்கு வணக்கம்,சித்தர்களுக்கு வணக்கம், ஆசாரியர்களுக்கு வணக்கம்,ஆசிரியர்களுக்கு வணக்கம்,உலக சாதுக்களுக்கு வணக்கம் என்பதுதான் இம்மந்திரத்தின் பொருளாகும்.இதில் எந்தவொரு மதக்கடவுளின் பெயரும் குறிப்பிடவில்லை.பொதுவாகவே உள்ளது.இதன் சிறப்பு பற்றி சீவக சிந்தாமணி நூலில் கூறப்பட்டு உள்ளது.
ஒரு நாயானது நான்மறைவல்ல அந்தணர்களுக்காக தயாரித்து வைக்கப்பட்டிருந்த உணவை சிறிது உண்டுவிட்டது. அதனைக் கண்டவர்கள் நாயை நன்றாக அடித்து கால்களை ஒடித்து விட்டார்கள். அவ்வேளையில் கள் அருந்திய நிலையில் வந்த நாயின் உரிமையாளன் அந்தணர்களை நாயை அடித்தற்காக,அவர்களை அச்சுறுத்தி சண்டையிட்டுக் கொண்டிருந்தான்.அப்பொழுது சீவக சிந்தாமணி காப்பியத் தலைவன் சீவகன் தன் வழியில் வரும்பொழுது அடிபட்டு துடிதுடித்துக் கொண்டிருக்கும் அந்நாயைக் கண்டு பதை பதைத்து வருந்தினான்.குடிகாரனிடம் ஆறுதல் கூறி அவனைத் தேற்றி அனுப்பி,அந்தணர்களின் ஆபத்தை நீக்கினான்.
நாயின் நிலையைக் கண்டு சீவகன் அழுதான்.அதன் அருகில் சென்று அடித்து அடித்துத் துடித்த நாய்க்கு அதன் காதில் ஐந்து மந்திரத்தை உரைத்தான்.மறக்காமல் இம்மந்திரத்தை நினைத்தால் உன் தீவினை மறைய எப்போதும் நீங்கா பேரின்பத்தை அடைவாய் என்றான்.அந்த நாயும் புனிதமான பஞ்சமந்திரத்தைக் கேட்டு மனதில் இருத்தி இறந்தது.அதனின் உயிர்,பாணிமுகம் என்ற முறைப்படி விலங்கான அந்நாயின் உடலை விட்டு நீங்கி,மேலுலகத்தில், மகாமந்திரம் கேட்டதால் சுதஞ்சனன் எனும் தேவனாகப் பிறந்தது.