வலிமையைத் தரும் ராம மந்திரம்; அனும மந்திரம்!

By வி. ராம்ஜி


ராம மந்திரமும் அனும மந்திரமும் சொல்லி வந்து, ராம பக்த அனுமனை வணங்கி வந்தால், மனோ வலிமையைப் பெறலாம். மனதில் இருந்த குழப்பங்களையும் கவலைகளையும் களைந்து அருளுவார் ஜெய் அனுமன்.

வழிபாடுகளில் எளிய வழிபாடு என்று அனுமன் வழிபாட்டைச் சொல்லுவார்கள். வைஷ்ணவ ஆலயங்களில் அனுமனுக்கு தனிச்சந்நிதியே அமைந்திருக்கும். ஆலயங்களுக்குச் சென்று அனுமனை வழிபட்டு வந்தாலே எண்ணற்ற பலன்களை கிடைக்கப் பெறலாம் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.

அனுமன் சந்நிதியில் நின்று மனதார வேண்டிக்கொண்டாலே போதும். வேண்டிய வரங்களைத் தந்தருளுவார் ஆஞ்சநேயர். புதன், வியாழன் மற்றும் சனிக்கிழமைகளில் அனுமனைத் தவறாமல் தரிசித்து பிரார்த்தனை செய்வது நம் பிரச்சினைகளையும் சிக்கல்களையும் கவலைகளையும் துக்கங்களையும் போக்கும் என்கிறார்கள் பக்தர்கள்.

அனுமன் சாலீசா வலிமை மிக்க மந்திரமாக, வலிமை தரும் மந்திரமாகப் போற்றப்படுகிறது. தினமும் அனுமன் சாலீசா பாராயணம் செய்யலாம். அல்லது ஒலிக்கவிட்டுக் கேட்கலாம். அதேபோல் அனுமனின் மூல மந்திரத்தை 54 முறை அல்லது 108 முறை சொல்லி அனுமனை வழிபடுவது கிரக தோஷங்களையெல்லாம் நீக்கும் என்பது ஐதீகம்.

ஹங் அனுமதே
ருத்திராத்மஹே ஹூங் பட்

எனும் ஆஞ்சநேய பெருமானின் மூல மந்திரத்தை தினமும் 11 முறை சொல்லி வழிபடுவோம். இது இதுவரையிலான தடைகளையெல்லாம் போக்கி அருளும்.

முக்கியமாக, அனுமன் சந்நிதிக்கு முன்னே நின்று கொண்டு, ‘ஜெய் ராம்...’ என்றும் ‘ராம் ராம்’ என்றும் ‘ஸ்ரீராம் ஜெய்ராம் ஜெயஜெய ராம்’ என்றும் சொல்லி வழிபடுங்கள். வளமும் நலமும் தந்தருளுவார் ஜெய் அனுமன்.

முடிந்தால், அனுமனுக்கு துளசி மாலை சார்த்தி வேண்டிக்கொள்ளுங்கள். குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் வெண்ணெய் காப்பு சார்த்தி வேண்டிக்கொள்ளலாம்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE