அனைவர் இதயத்தையும் வெல்ல...

By ஜி.விக்னேஷ்

ஜகத்குரு காஞ்சி காமகோடி பீடாதிபதி சங்கராச்சாரியார் ஸ்ரீசந்திரசேகர சரஸ்வதி சுவாமிகளால் இயற்றப்பட்டது மைத்ரீம் பஜத என்று தொடங்கும் பாடல். எம்.எஸ். சுப்புலஷ்மிக்கு ஐக்கிய நாடுகள் சபையில் பாடுவதற்கு அழைப்பு வந்ததை அடுத்து அச்சபையில் பாடுவதற்காக இப்பாடலை இயற்றித் தந்தார். பல மதங்களைச் சேர்ந்த பன்னாட்டினர் வருகை தரும் இச்சபைக்கு ஏற்ற பாடலாக அதை அமைத்திருந்தார். உலக மக்கள் வாழ்த்திய அந்தப் அப்பாடலும் பொருளும்.

பாடல்:

மைத்ரீம் பஜத அகில ஹ்ருத் ஜேத்ரீம்

ஆத்மவத் ஏவ பராந் அபி பஷ்யத

யுத்தம் த்யஜத ஸ்பர்த்தாம் த்யஜத

த்யஜத பரேஸ்வ அக்ரம ஆக்ரமணம்

ஜனனீ ப்ருத்வீ காமதுகாஸ்தே

ஜனகோ தேவ: சகல தயாளு

தாம்யத தத்த தயத்வம் ஜனதா

ச்ரேயோ பூயா சகல ஜனானாம்

ச்ரேயோ பூயா சகல ஜனானாம்

ச்ரேயோ பூயா சகல ஜனானாம்

பொருள்:

பணிவு, அன்பு ஆகியவற்றைக் கொண்ட சேவையை உலக மக்கள் அனைவரும் செய்யுங்கள். அச்சேவையே அனைவர் இதயத்தையும் வெல்ல உதவும். தன்னைப் போலவே அனைவரையும் எண்ணிப் பாருங்கள். போரினைக் கைவிடுங்கள். அவசியமற்ற அதிகார போட்டியினையும் கை விட்டுவிடுங்கள். பிறர் நாட்டையும் சொத்தையும் ஆக்கிரமிக்கும் அக்கிரமச் செயலைக் கை விட்டு விடுங்கள். பூமித்தாய் மிகப் பெரியவள். காமதேனுவைப் போல் நம் எல்லோருடைய ஆசைகளையும் நிறைவேற்றக் காத்துக்கொண்டிருக்கிறாள்.

மக்களின் தந்தையான இறைவனோ எல்லோர் மேலும் மிகவும் கருணை கொண்டவனாதலால் தன்னடக்கம் கொள்ளுங்கள். எல்லோருக்கும் உங்கள் செல்வத்தை தானம் கொடுங்கள். எல்லோரிடமும் கருணையோடு இருங்கள் மக்களே. உலக மக்கள் அனைவரும் மகிழ்ச்சியுடன் எந்தக் குறையும் இன்றி இருக்கட்டும்!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE